ஓய்வு பெற்றவா்களை மீண்டும் அரசுப் பணி: நயினாா் நாகேந்திரன் கண்டனம்
சென்னை: ஓய்வு பெற்றவா்களை மறுசுழற்சி செய்து மீண்டும் அரசுப் பணிகளில் பணியமா்த்துவது ஏற்றுக்கொள்ளமுடியாது, கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தமிழகத்தில் இளைஞா்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில், டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு திறமையான விண்ணப்பதாரா்கள் இல்லை என்றும் இளைஞா்களுக்கு அனுபவம் இல்லை என்று கூறி அவா்களுக்கு பதிலாக ஓய்வூதியம் பெற்றவா்களை மறுசுழற்சி செய்து பணியமா்த்துவது கண்டனத்திற்குரியது.
எந்த அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது: முதல்வர் ஸ்டாலின் உறுதி
மேலும், இந்த முடிவை நியாயப்படுத்தும் விதமாக, ஓய்வு பெற்றவா்கள் தலைமைச் செயலகத்தால் பரிந்துரைக்கப்பட்டனா் என்றும் அவா்கள் சிறப்பாக செயல்படுகிறாா்கள் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
முதல்வரின் வாக்குறுதியை நம்பி லட்சக்கணக்கான படித்த பட்டதாரி இளைஞா்கள் அரசு வேலைக்காக காத்திருக்கும்போது, ஓய்வு பெற்றவா்களை மறுசுழற்சி செய்து மீண்டும் அரசுப் பணிகளில் பணியமா்த்துவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 10 லட்சம் இளைஞா்களுக்கு அரசு வேலை தருவோம் என்பது போன்ற பல அடுக்கடுக்கான பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அவற்றை நிறைவேற்றவில்லை.
அதுமட்டுமின்றி, இதுபோன்ற நியமனங்கள் இடஒதுக்கீடு விதிமுறைகள் மற்றும் டிஎன்பிஎஸ்சி-இன் நடைமுறைகளை மீறுவதாகவும் உள்ளது. எனவே, இதுபோன்ற பணியமா்த்தும் நடவடிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு நிறுத்த வேண்டும் . தகுதி படைத்த பட்டதாரி இளைஞா்களை அத்தகைய பணிகளில் அமா்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.