புதுச்சேரியில் மதுக் கடைகளுக்கான லைசன்ஸ் கட்டணம் உயர்வு!
புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைஉரிமத்திற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்வு கடந்த மே 28 ஆம் தேதி அமலுக்கு வந்தது. பீருக்கு ரூ.10 வரையிலும், குவார்ட்டர் மது பாட்டில் ரூ.6 முதல் ரூ.30 வரையும் விலை உயர்ந்துள்ளது.
அரசுக்கு நிதி வருவாய் குறைவாக இருப்பதால் அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மதுக்கடை உரிமத்திற்கான ஆண்டுக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
மொத்த கொள்முதல் கடைகளுக்கான உரிமத்திற்கு ஆண்டு கட்டணம் ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாகவும் சில்லறைக் கடைகளுக்கான ஆண்டு கட்டணம் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ.14 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பிரிவின் கீழ் உணவகங்களில் செயல்படும் மதுக்கூடங்களுக்கான ஆண்டு கட்டணம் ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மதுபானங்கள் ஏற்றுமதி, இறக்குமதிக்கான கலால் வரியையும் அரசு உயர்த்தியுள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் இந்த உரிமத் தொகையை 10 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அரசு இப்போது உயர்த்தியுள்ளது.
இதையும் படிக்க | நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!