Russia - Ukraine War: பயங்கர தாக்குதலுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை.. முடிவு எ...
தில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது: மு.க.ஸ்டாலின்
மதுரை: திமுக இருக்கும் வரை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, தில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மண்ணில், தொன்மையான தமிழரின் பண்பாட்டை எடுத்துக்காட்டும் மதுரை மண்ணில், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு தேவையான முடிவுகளை எடுக்கவும், தமிழ்நாட்டை சூழ்ந்து நிற்கும் பகையை எதிர்கொண்டு முறியடிக்க, வியூகங்கள் அமைக்கவும், வெற்றியை நோக்கி உழைக்கவும் இந்தப் பொதுக்குழுவை கூட்டியிருக்கிறோம்.
போர் முழக்கம் கேட்டதுமே, வெற்றியைப் பறிக்கும் வேகத்துடன் களம் புகும் வேங்கைகள் போன்று, இங்கு கூடியிருக்கும் உங்களை பார்க்கும்போது, புது புத்துணர்ச்சி வருகிறது.
இன்றைக்கு தமிழ்நாட்டு உரிமைகளை நிலைநாட்ட உயர பறப்பது, நம்முடைய கருப்பு சிவப்புக் கொடி. இந்தக் கொடி எத்தனை போராட்டங்களுக்கு பிறகு - எத்தனை எத்தனை தியாகங்களுக்குப் பிறகு விண்ணுயர பறக்கிறது.
கழகத்துக்காக பலர் உழைத்த தியாக பூமியான மதுரை மண்ணில், கழகப் பொதுக்குழு நடப்பதை பெருமையாக கருதுகிறேன். கழகம் தொடங்கியதில் இருந்து, மதுரையில் ஆறு பொதுக்குழு நடைபெற்றிருக்கிறது. இது ஏழாவது பொதுக்குழு. ஏழாவது முறை கழகம் ஆட்சியமைக்க அடிகோலும் பொதுக்குழுதான் இது.
கழக வரலாற்றில், மதுரையில் நடந்த சில முக்கிய தருணங்களை சொல்கிறேன். இந்தி எதிர்ப்பு போர்க்களத்துக்கு அடித்தளம் அமைத்தது 1963-ஆம் ஆண்டு சட்ட எரிப்பு போராட்டம். மதுரை முத்து உள்ளிட்ட 5 பேர் ஓராண்டு காலம் சிறைத் தண்டனை பெற்றார்கள். அந்தப் போராட்டத்துக்கு பார்வையாளராக வந்த அன்றைய பொருளாளர் நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கருணாநிதியையும் கைது செய்து அடைத்தார்கள். மதுரை மாவட்டத்து மொழிப்போர் தளபதிகள் விடுதலையான அன்றைக்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தலைவர், மதுரை முத்துவும் - எஸ்.எஸ். தென்னரசும் திமுகவுக்கு கிடைத்த மருது சகோதரர்கள் என்று பாராட்டினார்.
அதேபோன்று, 1982-ஆம் ஆண்டு திருச்செந்தூர் கோயில் விவகாரத்துக்கு, நீதிகேட்டு நெடும்பயணத்தை மதுரையில் இருந்துதான் தலைவர் தொடங்கினார். பல நாள்கள் காலில் கொப்பளம் வெடிக்க கருணாநிதி நடைபயணம் மேற்கொண்டார்.
நாங்கள் நடந்து கொண்டேதான் இருப்போம்
கழகத்தின் தொண்டனாக செயல்பட்டு வந்த, என் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய திமுக இளைஞரணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றதும் இதே மதுரையில் இருக்கும் ஜான்சி ராணி பூங்காவில்தான். அந்த மாநாட்டில் பேசிய தலைவர், “எங்கள் கால்கள் நடையை நிறுத்தாது, நாங்கள் நடந்து கொண்டேதான் இருப்போம்” என்று சொன்னார். தலைவர் சொன்னது போன்று, நாம் நடந்து கொண்டேதான் இருக்கிறோம். நம்முடைய லட்சியப் பயணம் எப்போதும் நிற்காது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மண்ணில், இந்த மாபெரும் பொதுக்குழுவை எழுச்சியுடன் ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர் மூர்த்திக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள். அவருக்கு துணைநின்ற அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்டக் கழகச் செயலாளர்கள் – தளபதி மற்றும் மணிமாறன் ஆகியோருக்கும், மதுரை மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.!
முத்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா நடக்கும் நகரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முத்திரைத் திருவிழாவாக நம்முடைய பொதுக்குழுவை நடத்திக் கொண்டு இருக்கிறோம். கழகத்தின் இதயமான பொதுக்குழுவை எந்த அரங்கத்துக்கு உள்ளேயும் நடத்த முடியாத அளவுக்கு மைதானத்தில்தான் நடத்த முடியும் என்கிற அளவுக்கு பரந்து விரிந்திருக்கிறது.
அதிகக் கொடி ஏற்றிய கை
100 அடி உயரக் கொடிக் கம்பத்தில் கழகத்தின் கொடி பறக்கிறது. நூற்றாண்டு விழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று இந்த 100 அடி கொடி உணர்த்துகிறது.
மதுரையை சுற்றி 60 கிலோமீட்டர் சுற்றளவுக்கு கருப்பு சிவப்பு கொடி பறக்கிறது. அந்தக் காலத்தில் எந்த ஊருக்குச் சென்றாலும் நம்முடைய கொடி பறக்கிறதா என்று என் கண்கள் தேடும். தமிழ்நாட்டில் அத்தனை ஊரிலும், அத்தனை நகரத்திலும் அதிகக் கொடி ஏற்றிய கை, எனது கை.
இவைதான் நம் உயிர்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் - அறிவுலக ஆசான் பேரறிஞர் அண்ணா - தமிழினத் தலைவர் கலைஞர் - திராவிட முன்னேற்றக் கழகம் - கருப்பு சிவப்புக் கொடி - உதயசூரியன் சின்னம் - அண்ணா அறிவாலயம், இவைதான் நம் உயிர்! இந்த உயிர்களைக் கொண்டு, உயிரினும் மேலான தமிழ்நாட்டை - தமிழினத்தை இதுவரை காத்தது போன்று, இனியும் காப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ளும் பொதுக்குழுதான் இந்தப் பொதுக்குழு.
திமுக வழக்கமான அரசியல் கட்சி அல்ல. வரலாற்றில் எத்தனையோ அரசியல் கட்சிகள் வரும் - போகும். ஆனால், கொள்கைக்காக தோன்றி, லட்சியத்துக்காக தியாகங்கள் செய்து, மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியல் இயக்கம், இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சியைப் பிடித்த வரலாற்றைப் படைத்த இயக்கம், நம்முடைய இயக்கம். எத்தனை சோதனை நெருப்பாறுகள் வந்தாலும், அதில் எதிர்நீச்சல் போட்டு, உயர்ந்து நிற்கும்.
இனத்துக்காக உரிமைக்குரல் எழுப்புகிறவர்கள்
அப்படி இந்த மண்ணில், சமத்துவம் - சுயமரியாதை - சமூகநீதி - ஆகியவற்றின் அடிப்படையில் எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று உருவானவர்கள் நாம். இனத்துக்காக உரிமைக்குரல் எழுப்புகிறவர்கள் நாம். கொள்கைக்காக வாழுகிறவர்கள் நாம்.கொள்கையை பரப்ப கட்சியும் - கொள்கையை வென்றெடுக்க ஆட்சியும் தேவை என்று உழைப்பவர்கள் நாம். தடம் மாறாத கொள்கைக் கூட்டம் நாம். அதனால்தான் எந்த கோமாளிக் கூட்டத்தாரும் நம்மை வெல்ல முடியவில்லை; இனியும் வெல்ல முடியாது.
வியூகத்தை வகுக்கும் பொதுக்குழு
இங்கு கூடியிருக்கும் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது... நான் தொடக்கத்தில் சொன்னது போன்றே, இது வழக்கமான பொதுக்குழு அல்ல... ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு. அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றால், ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைத்தது. கழகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது. இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும். அதுக்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் இது.!
உங்களுக்கே தெரியும், நான் மமதையில் பேசுகிறவன் அல்ல. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல. எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது.
பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்
என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம். சொல்லைவிட செயலே பெரிது. வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று நான் சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில்தான். உங்கள் மேல் மட்டுமல்ல, இந்த பொதுக்குழுவுக்கு வராத, இரவு பகல் பார்க்காமல் - வெயில் மழை பார்க்காமல் - தனக்கு என்ன பயன் என்று பார்க்காம உழைக்கும், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளையும் நம்பித்தான் சொல்கிறேன். கழகம் இதுவரைக்கும் அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் நீங்கள்தான் காரணம். உடன்பிறப்புகளான நீங்கள் இல்லாமல் கழகமும் இல்லை; நானும் இல்லை. என்னைத் தலைவராக உருவாக்கியது நீங்கள். என்னை முதல்வராக்கி உயர்வைத் தந்தது, நீங்களும் – மக்களும். உலகத்தில் எந்தக் கட்சிக்கும், இப்படிப்பட்ட உறுதிமிக்க உழைப்பாளிகள் தொண்டர்களாக கிடைத்திருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட தொண்டர்கள் காத்து நிற்பதால்தான், 75 ஆண்டுகளைக் கடந்து, நூற்றாண்டை நோக்கி, அதே வேகத்துடன் நடைபோடுகிறோம்.
சூரியன் நிரந்தரமானது. அதேபோன்று கழகமும் நிரந்தரமானது. கழகம் எப்படி நிரந்தரமானதோ, அதேபோன்று கழக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அந்த நிலையை உருவாக்க முடியும். உங்களால்தான் முடியும். நம்மால்தான் முடியும்.
ஊடக சொகுசு இருந்ததில்லை
திமுகவுக்கு என்றைக்கும் ஊடக சொகுசு இருந்ததில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் மேல்தான் அதிக விமர்சனங்கள் குவியும். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது. அது வெளியே தெரியாமல் மறைக்க - திசை திருப்ப சிலர் நினைக்கிறார்கள்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம்
எப்படிப்பட்ட சூழலில் நாம் ஆட்சியில் அமர்ந்தோம் என்று மக்களுக்குத் தெரியும். கடந்த அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்கு சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். மத்திய பாஜக அரசு, நம்முடைய உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையையும் எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறோம். நமக்கு நியாயமாக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்க நினைத்தாலும், அந்த நெருக்கடிகள் அனைத்தையும் கடந்து, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலம்
பொருளாதாரரீதியான முட்டுக்கட்டைகள், அரசியல்ரீதியான முட்டுக்கட்டைகள், ஆளுநர் வழியாக முட்டுக்கட்டைகள், உரிமைகளை அபகரிக்கும் முட்டுக்கட்டைகள் என்று எத்தனை எத்தனையோ தடைகளை மத்திய பாஜக அரசு போட்டாலும், அதை எல்லாம் கடந்து, இன்று இந்தியாவிலேயே வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்.
அவதூறு அம்புகளை முறியடிக்க தயாராக வேண்டும்
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. அதனால், வழக்கத்தைவிட அதிகமாக, திமுகவுக்கு எதிராக - ஆட்சிக்கு எதிரா, அவதூறு அம்புகளை மக்கள் மத்தியில் எதிராளிகள் வீசுவார்கள். கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்கள் மனதில் பொய்யை விதைக்க முயற்சிப்பார்கள். சமூக ஊடகங்கள் மூலமும், விதைப்பார்கள். இதையெல்லாம் முறியடிக்க நாம் தயாராக வேண்டும். அவர்கள் ஒரு நேரேட்டிவ் செட் செய்ய நினைத்தால், நாம் அவர்களைவிட ஒரு படி முன்னால் இருக்க வேண்டும். அவர்களின் பொய்களுக்கு முன்னால், நம்முடைய உண்மை மக்களிடம் சென்று சேர வேண்டும்.
இயக்கத்துக்கு உண்மையாக இருங்கள்
கோடிக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட பேரியக்கம் நம்முடைய திமுக. இந்த பொதுக்குழுவுக்கு அந்த கோடியில் இருந்து 7 ஆயிரம் பேர் வந்திருக்கிறீர்கள். காலம் காலமாக கழகத்துக்கு உழைத்து, ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாமல், ஒன்றியச் செயலாளர் ஆக முடியாமல், நகரச் செயலாளர் ஆக முடியாமல், நிர்வாகி ஆக முடியாமல், மறைந்தவர்கள்தான் கழகத்தில் அதிகம். கருணாநிதி பக்கத்தில் நின்றுகூட பார்க்காமல் மறைந்தவர்கள் அதிகம். அண்ணா அறிவாலயத்தின் வாசல் படியைக்கூட மிதிக்காத உடன்பிறப்புகள் அதிகம்.
ஆனால், இத்தனை லட்சம் பேரில், 30 அமைச்சர்கள், 150 சட்டப்பேரவை உறுப்பினர்கள் , 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள், 76 மாவட்டச் செயலாளர்கள், 21 மாநகர செயலாளர்கள், 160 நகர செயலாளர்கள், 490 பேரூர் செயலாளர்கள், 936 ஒன்றிய செயலாளர்கள், 236 பகுதி செயலாளர்கள், 1,505 பகுதி வார்டு செயலாளர்கள், 3,876 நகர வார்டு செயலாளர்கள், 7,629 பேரூர் வார்டு செயலாளர்கள், 12 ஆயிரத்தி 525 ஊராட்சி செயலாளர்கள், 79 ஆயிரத்தி 962 கிளைச் செயலாளர்கள், 68 ஆயிரத்தி 467 பூத் பொறுப்பாளர்கள், பல ஆயிரம் சார்பு அணி நிர்வாகிகள் என்று இத்தனை பேருக்கு திமுக பொறுப்புகளை வழங்கியிருக்கிறது. உங்களை வாழ வைத்த கழகத்தை நீங்கள் வாழ வையுங்கள். இந்த இயக்கத்துக்கு உண்மையாக இருங்கள். இதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள்.
தில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது
திமுக இருக்கும் வரை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, தில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். பொதுக்குழுவில் தொடங்கியிருக்கும் இந்தப் பயணத்த சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்தில் நாம் நிறைவு செய்ய வேண்டும். அதில் மீண்டும் ஒன்றாக சந்திப்போம் என்று கூறி விடைபெறுகிறேன் என்றார்.