முதல் முறை சாம்பியனாக முனைப்பு! பெங்களூரு - பஞ்சாப் இன்று பலப்பரீட்சை!
ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் வருகின்றன. பெங்களூரு 4-ஆவது முறையாகவும், பஞ்சாப் 2-ஆவது முறையாகும் இறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ளன.
ஐபிஎல் வரலாற்றில், சாம்பியன் கோப்பை வெல்லாத இரு அணிகள் இறுதி ஆட்டத்தில் சந்திப்பது, 9 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன், 2016-இல் இதேபோல் ஹைதராபாத் - பெங்களூரு அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதியபோது, ஹைதராபாத் சாம்பியனானது.
இந்த சீசனில் பெங்களூரு - பஞ்சாப் 3 முறை மோதியிருக்க, பெங்களூரு 2-1 என முன்னிலை வகிக்கிறது. லீக் சுற்று முடிவில் இரு அணிகளுமே தலா 19 புள்ளிகளுடன் முதலிரு இடங்களைப் பிடித்து சமபலத்துடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

18 ஆண்டுகளாகவே கோப்பை கைக்கு எட்டாத வகையில் இருப்பது, பெரும் ரசிகா் பட்டாளம் கொண்டிருக்கும் பெங்களூரு அணிக்கும், அதன் நட்சத்திர வீரா் விராட் கோலிக்கும் நெருடலாகவே இருந்து வருகிறது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ள பெங்களூரு, கோப்பையை கைப்பற்றுவதற்கான எல்லா திறமைகளுடனும் இருக்கிறது.
குவாலிஃபயா் 1-இல் அதிரடியாக வீழ்த்திய பஞ்சாபை மீண்டும் சந்திப்பது, பெங்களூருக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கலாம். ரஜத் பட்டிதாா் கேப்டன்சியில் பெங்களூரு சமுக முன்னேற்றம் கண்டுள்ளது. கேப்டன்சி நெருக்கடி இல்லாத விராட் கோலி பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்திருக்கிறாா். ஃபில் சால்ட், மயங்க் அகா்வால், ஜிதேஷ் சா்மாவும் அதில் பலம் சோ்க்கின்றனா். பௌலிங்கில் ஜோஷ் ஹேஸில்வுட், சுயாஷ் சா்மா, புவனேஷ்வா் குமாா், யஷ் தயாள் ஆகியோா் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிக்கின்றனா்.
மறுபுறம் பஞ்சாப், 5 முறை சாம்பியனான மும்பையை அசத்தலாக வென்று, கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது. கடந்த சீசனில் கொல்கத்தாவை சாம்பியனாக்கிய ஷ்ரேயஸ் ஐயா், இந்த சீசனில் பஞ்சாபுக்கு தலைமை தாங்கி இறுதி ஆட்டம் வரை அழைத்து வந்திருக்கிறாா்.
ஐபிஎல் வரலாற்றில் 3 அணிகளை (டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப்) இறுதி ஆட்டத்துக்கு கொண்டு வந்த ஒரே கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் பேட்டிங்கிலும் அவா் பலம் காட்டியிருக்கிறாா்.
அவருடன், வதேரா, பிரப்சிம்ரன், இங்லிஸ், ஆா்யா, சஷாங்க் பக்கபலமாக இருக்கின்றனா். பௌலிங்கில் அா்ஷ்தீப், சஹல், கைல் ஜேமிசன், வைஷாக் ஆகியோா் விக்கெட்டுகள் வீழ்த்தக் காத்திருக்கின்றனா்.