ம.பி: மர்ம முறையில் கணவர் மரணம்; காணாமல் போன பெண்- தேனிலவுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்தது என்ன?
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன் மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் தேனிலவுக்கு மேகாலயா சென்றுள்ளனர். அங்கு இருவரும் மே 23ஆம் தேதி காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் உடல் 11 நாட்களுக்குப் பிறகு ஜூன் இரண்டாம் தேதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட உடலை விசாரணை செய்கையில் சம்பந்தப்பட்ட நபரின் சகோதரர் அவரது வலது கையில் ராஜா என்று பச்சை குத்தப்பட்டிருந்ததைக் கொண்டு அவரது உடலை அடையாளம் கண்டார்.
இதனை அடுத்து காணாமல் போன தம்பதியில் சோனம் என்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் கடைசியாக சோனம் அவரது மாமியாருடன் உரையாடிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று சோனமின் மாமியார் கேட்பதற்கு அந்தப் பெண் பதில் கூறுகிறார்.
”மலையேற்றம் செய்கிறேன், அங்கு காட்டில் எதுவும் சாப்பிடுவதற்கு கிடைக்காது.. பயணம் காரணமாக நான் என் உண்ணாவிரதத்தை முடிக்க மாட்டேன். இது ஒரு கடினமான மலையேற்றம்" என்று கூறுகிறார் அந்த பெண்.. இந்த அழைப்பின் போது சோனம் அதிகமாக மூச்சு வாங்கியதையும் மாமியார் குறிப்பிட்டு கேள்வி கேட்டிருக்கிறார். இந்த ஆடியோ தான் வைரலானது. இந்த ஆடியோவின் நம்பகதன்மையையும் ஆராய்ந்து வருகின்றனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, தம்பதியினர் மே 22 அன்று மவ்லகியாட் கிராமத்திற்கு வந்து, பின்னர் நோங்கிரியாட்டுக்குச் சென்று, அங்கு இரவு தங்கினர்.
மறுநாள் காலை அவர்கள் ஹோம்ஸ்டேயை விட்டு வெளியேறி, மே 24 அன்று, ஷில்லாங்கிலிருந்து சிரபுஞ்சி என்றும் அழைக்கப்படும் சோஹ்ராவுக்குச் செல்லும் சாலையில் ஒரு ஓட்டலுக்கு வெளியே அவர்களின் ஸ்கூட்டர் கண்டெடுக்கப்பட்டது.
வாடகைக்கு எடுக்கப்பட்ட ஸ்கூட்டரில் மவ்லக்கியத் கிராமத்திற்கு வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 11 நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட ராஜாவின் உடல் வைத்து விசாரணை நடத்தியதில் அவர் அரிவாளால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் ஒரு பெண்ணின் வெள்ளைச் சட்டை, மருந்து அட்டை, மொபைல் போனின் எல்சிடி திரையின் ஒரு பகுதி, ஒரு ஸ்மார்ட்வாட்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அந்த பெண் குறித்து, தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.