பக்ரீத்: கால்நடைகள் வெட்ட அனுமதித்ததை எதிா்த்த மனு! அவசர வழக்காக விசாரிக்க உச்சந...
"குழந்தை இறந்துவிட்டது" - அரசு மருத்துவமனை மறுத்ததால் தனியார் மருத்துவமனையில் பிரசவம்; என்ன நடந்தது?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அங்குள்ள ஹசரிபாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மனீஷா குமாரி என்ற கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக வந்தார்.
அவர் தனது ஊருக்கு அருகில் எந்தவித மருத்துவமனையும் இல்லாததால் 120 கிலோமீட்டர் பயணம் செய்து அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

ஆனால் பணியிலிருந்த செவிலியர் கர்ப்பிணிப் பெண்ணைப் பரிசோதித்துவிட்டு, ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது என்றும், வயிற்றில் இருக்கும் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
அதற்கு மனீஷா எதிர்ப்பு தெரிவித்தபோது ஆப்ரேசன் தியேட்டரில் தலைமை செவிலியர் இருப்பார் என்றும், அவரைச் சென்று பார்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து மனீஷா கூறுகையில், ''நான் ஆப்ரேசன் தியேட்டருக்குச் சென்றபோது அங்கிருந்த செவிலியர் ஆபரேசன் தியேட்டரை மூடிவிட்டு உள்ளே உறங்கிக்கொண்டிருந்தார்.
கதவைத் தட்டிப்பார்த்தேன். ஆனால் அவர் கதவைத் திறக்கவில்லை. எனக்கு வயிற்று வலி அதிகரித்தது. இதனால் வேறு வழியில்லாமல் அருகில் 2 கிலோமீட்டர் தொலைவிலிருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம்.
அங்கு அனைத்து சோதனைகளையும் எடுத்துவிட்டு என்னை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது'' என்று தெரிவித்தார்.

இது குறித்து அரசு மருத்துவ அதிகாரி மருத்துவர் சசி பிரகாஷ் கூறுகையில், ''நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடந்தது துரதிருஷ்டவசமானது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
மாநிலச் சுகாதாரத்துறை அமைச்சர் அன்சாரியும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.