இயந்திரத்தனமாக முன்ஜாமீன் அளிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக முன்ஜாமீன் அளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிகாரில் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கு முன்ஜாமீன் வழங்கி, மாநிலத்தில் உள்ள பாட்னா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக கொல்லப்பட்டவரின் மகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: இந்திய தண்டனை சட்டம் 302, 307 ஆகிய பிரிவுகளின் கீழ் கடுமையான குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், எந்தக் காரணமும் இல்லாமல் உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்துள்ளது.
இது புதிரான உத்தரவு. அதில் போதிய நீதித்துறை பகுப்பாய்வு இல்லை. இதுபோன்ற கடுமையான குற்றங்களில் இயந்திரத்தனமாக அளிக்கப்படும் முன்ஜாமீன் நீடிக்க முடியாது. எனவே உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீா்ப்பளித்தது.