பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு ஜூன்10 -இல் சிறப்பு ரயில்
ஒரேஇடத்தில் நின்றுகொண்டு மாதம் ரூ.5 - 8 லட்சம் வரை சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர்! - இது எப்படி?
மும்பையின் புறநகர் பகுதி ஆட்டோக்களால் சூழப்பட்ட நெருக்கடியை சந்தித்து வரும் ஒரு பகுதியாகும். இந்த கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வண்டியை எங்கேயும் கொண்டு செல்லாமல் ஒரே இடத்தில் நிறுத்திக்கொண்டு மாதம் பல லட்சம் சம்பாதித்து வருகிறார்.
டெல்லியை சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் ராகுல் ருபானி என்பவர் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வந்தபோது அவருக்கு ஏற்பட்ட ஒரு வித்தியாசமான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அது இப்போது வைரலாகி இருக்கிறது. மும்பை பாந்த்ரா - குர்லா காம்ப்ளக்ஸில் அமெரிக்க தூதரகம் இருக்கிறது. இத்தூதரகத்திற்கு விசா நேர்முகத்தேர்வுக்காக ராகுல் வந்திருந்தார்.
வித்தியாச முயற்சி..!
அவர் அதன் பிறகு நடந்த சம்பவங்களை ஒரு பதிவாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஆட்டோ டிரைவர் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து ``தினமும் ஆட்டோவை பார்க்கிங் செய்து மாதம் ரூ.5-8 லட்சம் சம்பாதிப்பதாக" குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், ``நான் தூதரகத்திற்குள் சென்றபோது எந்த பேக்கையும் கையில் எடுத்துச்செல்லக்கூடாது என்று அங்கு நின்ற பாதுகாவலர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் எனது கையில் இருந்த பேக்கை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றேன். அந்நேரம் தூரத்தில் நின்ற ஆட்டோ டிரைவர் என்னை பார்த்து கையசைத்து கூப்பிட்டார். நான் அவரிடம் சென்றபோது, `சார் பேக்கை என்னிடம் கொடுங்கள்' பத்திரமாக வைத்திருக்கிறேன். அதற்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
ஆரம்பத்தில் எனது பேக்கை கொடுக்க தயங்கினேன். அதன் பிறகு அவரிடம் கொடுத்தேன். இது நல்ல தொழில் ஐடியாவாக இருக்கிறது. தினமும் 20 முதல் 30 பேரிடம் அந்த நபர் பேக்கை வாங்கி பத்திரமாக வைத்திருக்கிறார். இதன் மூலம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தினமும் சம்பாதிக்கிறார். இதில் அவருக்கு மாதம் ரூ.5 முதல் 8 லட்சம் வரை கிடைக்கிறது. ஆட்டோ டிரைவர் தன்னிடம் அதிக பட்சமாக 30 பேக்களை மட்டும் வைத்துக்கொள்கிறார். அதிகப்படியான பேக்கள் வந்தால் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க போலீஸ் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த போலீஸ் அதிகாரிக்கு அருகில் சிறிய லாக்கர் வசதி இருக்கிறது. ஆட்டோ டிரைவர் தனது வங்கியை எங்கேயும் ஓட்டிச்செல்லவில்லை.
மாதம் 8 லட்சம் வரை சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர் எம்.பி.ஏ.எதுவும் படித்திருக்கவில்லை''என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்பதிவு வெளியானதும் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ஒருவர் அமெரிக்க தூதகரத்தில் ரூ.500க்கு பேக்களை வைத்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதனை ராகுல் மறுத்துள்ளார். மொபைல் போனை மட்டுமே அமெரிக்க தூதரகத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆட்டோ டிரைவரின் இச்சேவை கலந்த தொழிலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.