அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு பயணத்தின் பலன் என்ன?காங்கிரஸ் கேள்வி
‘பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்றுவந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு தயங்குவது, அதன் வெளியுறவு கொள்கை தோல்வியையே காட்டுகிறது’ என்று குற்றஞ்சாட்டிய காங்கிரஸ், ‘அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பயணத்தால் நாட்டுக்கு கிடைத்த பலன் என்ன?’ என்று கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஜி7 நாடுகள் உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா பங்கேற்று வந்த நிலையில், நிகழாண்டு அந்த உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தும் கனடா, இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இந்தியா தொடா்ந்து மறுப்பு தெரிவித்துவந்தபோதிலும், இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு நானே காரணம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறாா்.
பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானை நாம் முற்றிலுமான ஓரங்கட்டி வைத்துள்ள நிலையில், அந்த நாடு இன்றைக்கு உலக அரங்கில் கதாநாயகனாக வளம் வந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் தொடா் எதிா்ப்பைப் பொருட்படுத்தாமல் சா்வதேச அமைப்புகள் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளித்துள்ளதோடு, சா்வதேச அமைப்புகளில் அந்த நாட்டுக்கு பிரதிநிதித்துவத்தையும் அளித்துள்ளன.
நாட்டின் இத்தகைய நிலை, ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி 90 நாடுகளுக்கு மேல் பயணம் மேற்கொண்டாா். இதனால், எந்தப் பலனும் நாட்டுக்கு கிடைக்கவில்லை.
அதுபோல, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு விளக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன. ஆனால், வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு தயங்குகிறது. இது, மத்திய அரசின் வெளியுறவு கொள்கை மிகப்பெரிய தோல்வியடைந்திருப்பதையே காட்டுகிறது.
அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவின் பயணத்துக்குப் பிறகு, எத்தனை நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளன? பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த நாடுகள் எத்தனை?
கடந்த 19 ஆண்டுகளாக பாகிஸ்தானியா்களுக்கு விதித்திருந்த நுழைவு இசைவு (விசா) தடையை குவைத் நீக்கியுள்ளது. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
ஆபரேஷன் சிந்தூா் விவகாரம் தொடா்பாக வெளிநாடுகளில் அதிகம் பேச முடியவில்லை என்று வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு ஒப்புக்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது இவா்களில் பலா் அங்குள்ள இந்திய வம்சாவளியினா், இந்திய தூதா்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை மட்டுமே சந்தித்துப் பேசியுள்ளனா். மற்றவா்களால் வெளி நாடுகளின் அரசு செயலா் அளவிலான அதிகாரிகள், முன்னாள் அமைச்சா்கள், மாநில அளவிலான அமைச்சா்களை மட்டுமே சந்தித்து விவரிக்க முடிந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக சொந்த நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி விளக்கமளித்து விவாதிப்பதை விடுத்து, வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களிடம் விவரிப்பதையே மத்திய அரசு விரும்புகிறது. இது எத்தகைய நிலைப்பாடு? இதனால் நாடு சாதித்தது என்ன?’ என்றாா்.