திமுக - அதிமுக வேட்பாளா்கள் 6 போ் மனு தாக்கல்: போட்டியின்றி தோ்வாக வாய்ப்பு!
"வெளிநாடு சென்றால் தலைமறைவு" - பாஜக ஆட்சியின் அமைச்சர் புஜ்பால் குறித்து அமலாக்கப்பிரிவு அச்சம்
மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ.க கூட்டணி அரசில் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சகன் புஜ்பால் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் பா.ஜ.க கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது சகன் புஜ்பாலுக்குப் பதவி கொடுக்கப்படவில்லை.
இதற்கு முன்பு சகன் புஜ்பால் மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது டெல்லியில் மகாராஷ்டிரா சதன் கட்டப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக சகன் புஜ்பால் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இப்புகாரின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு சகன் புஜ்பாலைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது. அவர் இப்போது ஜாமீனில் இருக்கிறார்.
பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கும்போதுதான் சகன் புஜ்பால் கைது செய்யப்பட்டார். இப்போது அதே பா.ஜ.க கூட்டணி அரசு மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கிறது.
கைது செய்த அதே அரசு சகன் புஜ்பாலுக்கு அமைச்சர் பதவியும் கொடுத்திருக்கிறது. சகன் புஜ்பால் மீதான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த 20ம் தேதிதான் அமைச்சராக புஜ்பால் பதவியேற்றுக்கொண்டார். சகன் புஜ்பால் தான் வெளிநாடு சென்று வர அனுமதிக்கவேண்டும் என்று கோரி கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஏப்ரல் 29ம் தேதி சகன் புஜ்பால் வெளிநாடு சென்று வரச் சிறப்பு நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்தது. அதோடு பாஸ்போர்ட்டையும் திரும்பக் கொடுக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் உத்தரவிட்டது.
மே 24ம் தேதியிலிருந்து ஜூன் 8ம் தேதி வரை வெளிநாடு சென்று வரலாம் என்று கோர்ட் தெரிவித்திருந்தது.
ஆனால் கடந்த மாதம் அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் அதிகாலை நேரத்தில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இதில் சகன் புஜ்பாலின் பாஸ்போர்ட் எரிந்துவிட்டது. இதனால் திட்டமிட்ட தேதியில் சகன் புஜ்பால் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து புதிய பாஸ்போர்ட் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே வெளிநாடு சென்றுவிட்டுத் திரும்ப வரும் தேதியை நீட்டித்துக் கொடுக்கவேண்டும் என்று கோரி சகன் புஜ்பால் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு விசாரணைக்கு வந்தபோது அமலாக்கப்பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், சகன் புஜ்பாலை வெளிநாடு செல்ல அனுமதித்தால் அவர் தலைமறைவாகிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.
ஆனால் கோர்ட் அமைச்சர் சகன் புஜ்பால் வெளிநாட்டிலிருந்து நான்கு நாள்கள் தாமதமாக வரலாம் என்று தெரிவித்துள்ளது.