Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
திருச்செந்தூர் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயில், ஸ்ரீ அமிர்த குண விநாயகர் மற்றும் ஸ்ரீ சொர்ணவர்ண சாஸ்தா கோயில்களில் இன்று (ஜூன் 6) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதற்காக சிவன் கோயில் மற்றும் வெயிலுந்தம்மன் கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை பூஜைகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) மாலை தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடந்தது.
இன்று காலை நான்காம் கால யாக சாலை பூஜைகளும், மகா பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் யாத்ராதானம் ஆகி கலசங்கள் புறப்பட்டது. தொடர்ந்து காலை 5.45 மணிக்கு விமான கலசத்திற்கு கும்பாபிஷேகமாகியது.
பின்னர் சுவாமி, அம்மனுக்கு மூலஸ்தான அபிஷேகமாகி, அலங்கார தீபாராதனையும், மதியம் அன்னதானமும் நடைபெற்றது. பூஜைகளை ஸ்ரீ ஷண்முகா பூஜா கைங்கர்ய ஸ்தானத்தார் சிவாச்சாரியர்கள் செய்தனர். இன்று மாலை பிரசன்ன பூஜை, புஷ்பாஞ்சலி மற்றும் சுவாமி நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது.
இதே போல வெயிலுகந்தம்மன் கோயிலில் நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், இன்று காலை நான்காம் கால யாக சாலை பூஜை, மகா பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் யாத்ரா தானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 6.18 மணிக்கு விமான கலசங்களுக்கு அபிஷேகமாகியது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம் தீபாராதனையும், பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. பூஜைகளை பார சைவ பூஜா ஸ்தாணிகர்கள் செய்தனர்.
இன்று இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவில் திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, திருக்கோயில் தக்கார் அருள்முருகன், உதவி ஆணையர் நாகவேல், கண்காணிப்பாளர்கள் ரோகிணி, அஜித், விவேக், சுபிதா, விஜயலட்சுமி உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.