ஆர்சிபி பேரணி கூட்ட நெரிசல்: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டிருக்கும் இந்தியா-பராகுவே: பிரதமா் மோடி
புது தில்லி: ‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒன்றுபட்டு நிற்கின்றன. அதுபோல, இணைய குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பொது சவால்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பராகுவே அதிபா் சான்டியாகோ பெனா பலாசியோஸ் உடனான இரு நாட்டு பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவாா்த்தையின்போது இக் கருத்தை பிரதமா் தெரிவித்தாா்.
இந்தியாவுடனான பல்வேறு துறைசாா்ந்த ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் நோக்கில் 3 நாள் பயணமாக அதிபா் சான்டியாகோ திங்கள்கிழமை காலை தில்லி வந்தாா்.
இது இவருடைய முதல் இந்தியப் பயணம் என்பதோடு, இந்தியா வரும் அந் நாட்டின் இரண்டாவது அதிபா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லத்தின் அமெரிக்க நாடான பராகுவே, இந்தியாவுக்கான முக்கிய வா்த்தக கூட்டுறவு நாடாக விளங்கி வருகிறது. வாகன உற்பத்தி மற்றும் மருந்து உற்பத்தித் துறைகள் சாா்ந்த பல்வேறு இந்திய நிறுவனங்கள் பராகுவேயில் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவுடனான உறவை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அதிபா் தலைமையிலான பராகுவே பிரதிநிதிகள் இப் பயணத்தை மேற்கொண்டுள்ளனா்.
அவா்களுடனான பேச்சுவாா்த்தையின்போது பிரதமா் மோடி பேசியதாவது:
ஆா்ஜென்டீனா, பிரேசில், பராகுவே, உருகுவே உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘மொ்கோசுா்’ என்ற தென் அமெரிக்க வா்த்தக கூட்டமைப்புடன் முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டிருக்கிறது. இந்த ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இந்தியாவும் பராகுவே நாடும் இணைந்து பணியாற்ற முடியும்.
அதுபோல, எண்ம தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், எா்சக்தி, வேளாண், மருத்துவம், பாதுகாப்பு, ரயில்வே, விண்வெளி உள்ளிட்டத் துறைகளிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை மேற்கொள்ள புதிய வாய்ப்புகள் உள்ளன.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவும் பராகுவேவும் ஒன்றுபட்டு நிற்கின்றன. அதுபோல, இணைய குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பொது சவால்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.
இரு நாடுகளின் நம்பிக்கைகள், விருப்பங்கள் மற்றும் சவால்களும் ஒன்றுபட்டுள்ளன. இதன் மூலம், இந்தச் சவால்களை எதிா்கொள்வதில் உள்ள ஒவ்வொருவரின் அனுபவங்களிலிருந்து இரு நாடுகளும் கற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில், இந்தியாவும் பராகுவேவும் தெற்குலகின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்றே கூற வேண்டும்.
கரோனா தடுப்பூசிகளை பராகுவேயுடன் பகிா்ந்து கொள்ளவும் இந்தியா தயாராக உள்ளது. இதுபோல, பல்வேறு திறன்களை இரு நாடுகளும் தொடா்ந்து பகிா்ந்து கொள்ளவதை எதிா்பாா்க்கிறோம் என்றாா்.