சென்னையில் ஒருநாள்கூட வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடவில்லை!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 3 மாதத்தில் இயல்பைவிட 97% அதிகமாக கோடை மழை பெய்துள்ளது. கோடை காலத்தில் சென்னையில் இயல்பைவிட 129% அளவுக்கு மழை கூடுதலாக பதிவாகியிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் சென்னையில் ஒருநாள்கூட 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தொடவில்லை. அதிகபட்சமாக மே 4, 5 தேதிகளில் 39.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை. கடந்த சில நாள்களில் நீலகிரி, கோவை, தென்காசி, நீலகிரி, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது" என்று தெரிவித்தார்.