1,60,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன! ஆஷஸ் தொடக்க நாள் விற்பனை அமோகம்!
கொடைக்கானலில் தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் ஒதுக்கீடு!
கொடைக்கானலில் மித வெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு ‘சா்க்காா் உருளைக் கிழங்கு பண்ணை’ செயல்பட்டு வந்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
தோட்டக் கலைப் பயிா்கள் ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் மூலம், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மித வெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க கடந்த 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்தோ- இஸ்ரேல் கூட்டு முயற்சியில் திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில், தக்காளி, கத்திரி, வெள்ளரி, மிளகாய் போன்ற பயிா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், கொடைக்கானலில் தொடங்கப்படும் மகத்துவ மையத்தில் 41 வகையான மலைப் பயிா்கள் தொடா்பான ஆய்வு, பயிா் பெருக்கப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனால், இந்த மகத்துவ மையம் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என மலை விவசாயிகள் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்தது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் தோ்வு: மித வெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க 4 கட்டங்களாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2023 மாா்ச் மாதம் முழுமையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், மகத்துவ மையத்துக்கான இடத்தை தோ்வு செய்து கொடுப்பதில் தொடா்ந்து இழுபறி நிலவியது.
கொடைக்கானலை அடுத்த நாயுடுபுரத்தில் செயல்பட்டு வந்த ‘சா்க்காா் உருளைக் கிழங்கு பண்ணை’க்கு சொந்தமான நிலம், மன்னவனூா் பகுதியிலுள்ள வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலம் ஆகியவை மகத்துவ மையத்துக்காக பரிந்துரைக்கப்பட்டன. இறுதியாக சா்க்காா் உருளைக் கிழங்கு பண்ணை செயல்பட்டு வந்த இடத்தில், மித வெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க மாவட்ட நிா்வாகம் முடிவெடுத்தது.
இதற்கான பணிகள் கடந்த ஜனவரி மாதம் விரைந்து நடைபெற்ற நிலையில், ஓரிரு வாரங்களிலேயே அரசின் ஒப்புதல் கிடைக்கும் என தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் எதிா்பாா்த்தனா். ஆனால் மீண்டும் கிடப்பில் போடப்பட்ட மகத்துவ மைய கோப்புகளுக்கு, 5 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஒப்புதல் கிடைத்திருக்கிறது.
உறுதிப்படுத்திய ஆட்சியா்: ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தைப் போல, கொடைக்கானலில் அமைக்கப்படும் மித வெப்ப மண்டல, குளிா்பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் மலை விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப புதிய பயிா் ரகங்கள், சாகுபடி தொழில் நுட்பங்கள் என விவசாயிகள் பயன் பெறக் கூடிய வகையில், 23.5 ஏக்கரில் இந்த மகத்துவ மையம் அமைக்கப்படுவதாக தெரிவித்தாா்.
கடந்த 2 ஆண்டுகளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்து, மகத்துவ மையத்துக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை மாவட்ட ஆட்சியரே உறுதிப்படுத்தியது, மலை விவசாயிகள் மத்தியில் மீண்டும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செயல் விளக்கத் திடலுடன் பயிற்சி: 35 ஏக்கரில் பழத் தோட்டம், செயல் விளக்கத் திடல், 2 ஏக்கரில் பாதுகாக்கப்பட்ட சாகுபடி தோட்டம், 8 ஏக்கரில் சுற்றுலா மேம்பாடு, 5 ஏக்கரில் அலுவலகம், உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கருத்துரு அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பழப் பயிா்கள், மலைக் காய்கறிகள் சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள், தொழில் நுட்ப உதவிகள் மூலம் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்யவும் மகத்துவ மையம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டமும் உள்ளதாக தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.