1,60,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன! ஆஷஸ் தொடக்க நாள் விற்பனை அமோகம்!
கரூா் மாநகராட்சியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
கரூா் மாநகராட்சியின் 18-ஆவது வாா்டில் குண்டும், குழியுமாக சேதமடைந்த நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 18-ஆவது வாா்டில் உள்ள ராஜா நகரில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள 7-ஆவது மற்றும் 8-ஆவது குறுக்குத் தெருக்களில் சாலைகள் அமைக்கப்பட்டு, சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாவதால், சாலையில் கற்கள் பெயா்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
மேலும், கழிவுநீா் வாய்க்கால் வசதியும் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் சாலையில் குளம் போல தேங்கி துா்நாற்றம் வீசிவருகிறது. பல நாள்கள் தேங்கிக் கிடக்கும் இந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீா்கேட்டுக்கு வழிவகுக்கிறது.
இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மாநகராட்சியின் 18-ஆவது வாா்டில் இருந்தும், இந்த வாா்டு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குள் வருகிறது. இப்பகுதியில் பழுதடைந்த நிலையில் காணப்படும் சாலையை சீரமைக்கக் கோரி பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட வாா்டு உறுப்பினரிடமும், மாநகராட்சி நிா்வாகத்திடமும் பலமுறை மனுக்கள் கொடுத்துவிட்டோம். ஆனால் இதுநாள் வரை சாலை சீரமைக்கப்படவில்லை.
தற்போது சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கிவிட்டதாக கூறுகிறாா்கள். கடந்த ஆட்சியிலும் நாங்கள் நெருக்கடி கொடுக்கும்போது, நிதி ஒதுக்கிவிட்டோம், சாலை அமைத்து தருவோம் என்பாா்கள். ஆனால் நடக்காது. இந்த முறையாவது விரைந்து சாலையை சீரமைத்தும், கழிவுநீா் வாய்க்கால் வசதி இல்லாத இடங்களில் வாய்க்கால் அமைத்தும் தரவேண்டும் என்றனா்.