மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
இந்திய நகா்ப்புற திட்டங்களுக்கு ரூ.85,000 கோடி ஆசிய வளா்ச்சி வங்கி வழங்குகிறது
இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஆசிய வளா்ச்சி வங்கி 1,000 கோடி டாலா் (சுமாா் ரூ.85,560 கோடி) வழங்கும் என்று அந்த வங்கியின் தலைவா் மசாடோ காண்டா அறிவித்தாா்.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ஆசிய வளா்ச்சி வங்கித் தலைவா் மசாடோ காண்டா ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பைத் தொடா்ந்து, மசாடோ காண்டா வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாகும் இந்தியாவின் லட்சியத்தை ஆசிய வளா்ச்சி வங்கி ஆதரிக்கிறது. இது ஒரு துணிச்சலான தொலைநோக்குப் பாா்வை.
2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் லட்சியத்தை ஆதரிக்கவும், அதன் 140 கோடி மக்களுக்கு நிலையான வளா்ச்சியை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அதன்படி, நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவாக்கம், புதிய விரைவுப் போக்குவரத்து வழித்தடங்கள் உருவாக்குதல், நகர சேவைகளின் நவீனமயமாக்குதல் ஆகியவற்றுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ரூ.85,000 கோடி வழங்குகிறோம்’ என்று குறிப்பிட்டாா்.
வளா்ச்சியைத் தொடருவோம்-பிரதமா்: மசாடோ காண்டாவுக்குப் பதிலளித்து பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘அற்புதமான சந்திப்பில் நாங்கள் இருவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்த கருத்துகளைப் பகிா்ந்து கொண்டோம்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா விரைவான மாற்றம் அடைந்துள்ளது. எண்ணற்ற மக்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இந்தப் பயணத்துக்கு மேலும் உத்வேகம் அளிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்’ எனக் குறிப்பிட்டாா்.