செய்திகள் :

எந்த அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

post image

எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. தில்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே 'கட்டுப்பாட்டை மீறியது'தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

விட்டுக்கொடுத்து பணியாற்ற வேண்டும்

நான் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று, நம்முடைய கூட்டணி! 2017-ஆம் ஆண்டு முரசொலி பவள விழாவில் நம்முடைய பயணம் தொடங்கியது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஒரு கூட்டணி இத்தனை தேர்தல்களுக்கு தொடர்ந்ததாக வரலாறு இல்லை. நம்முடைய வெற்றிக் கூட்டணி வலுவாக தொடர்கிறது என்றால் அதுக்குக் காரணம், நம்முடைய கூட்டணி தோழர்களை நாம் மதித்து செயல்படுவதுதான். நம்முடைய கூட்டணித் தலைவர்களிடம் நான் எப்படி நட்போடும் பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும். சில இடங்களில் முரண்கள் இருந்தாலும், பேசி - விட்டுக்கொடுத்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றிப் பயணத்தை தொடர முடியும்.

மீண்டும் பாஜகவிடம் சரணடைந்த பழனிசாமி

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி என்ன நினைத்தார்? நம்முடைய கூட்டணி பிரிய வேண்டும் என்று நினைத்தார். அதுக்காக, என்னென்ன கதைகளையோ உருவாக்கினார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவுடன் பிரிந்த மாதிரி நடித்தால், நம்முடைய கூட்டணி உடையும் என்று நினைத்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. அதனால்தான், இப்போது தில்லிக்குச் சென்று, பல கார்களில் மாறிமாறி, அமித்ஷாவை சந்தித்து, மீண்டும் பாஜகவிடம் சரணடைந்துவிட்டார். அதிமுக – பாஜக கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தைகூட பேசாமல், பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். என்ன ஒரு அடக்கம்? சசிகலா இவரை முதல்வராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக்சன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு. என்ன... காலில் மட்டும்தான் விழவில்லை. அது தனியாக செய்தார்களா என்று நமக்கு தெரியவில்லை.

பாஜகவின் கண்ட்ரோலுக்குள் அதிமுக

நாம் கேட்பது... ஒரு மாநிலத்தில், ஒரு கூட்டணிக்கு யார் தலைமை வகிக்கிறார்களோ, அவர்கள்தான் கூட்டணியை அறிவிப்பார்கள். ஆனால், இங்கு அமித்ஷா அறிவிக்கிறார். இதிலிருந்தே இவர்கள் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக பாஜகவின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அதிமுக. அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பாஜகவின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார்.

எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது

அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார். நான் ஏற்கனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. தில்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘கட்டுப்பாட்டை மீறியது’-தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழ்நாட்டின் தனித்துவத்தை அழித்திவிடுவார்கள்

பாஜக கூட்டணி ஆட்சி வந்தால், தமிழ்நாட்டை என்ன செய்வார்கள் என்று சொல்ல வேண்டும். மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்கவிட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது. இந்தி மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்திவிடுவார்கள் என்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, புதிதாக சிலர் “நாங்கள்தான் மாற்று” என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள். அவர்களுக்கும் பதிலடி தர வேண்டும்.

தேர்தல் களத்தில் நீங்கள் பரப்புரை செய்ய செல்லும்போது, நாம் மக்களுக்காக என்ன எல்லாம் செய்திருக்கிறோம் - நம்முடைய ஆட்சியில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களால், உங்கள் மாவட்டம், உங்கள் தொகுதி என்று, உங்கள் பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை கடந்த காலத்தில் இருந்த நிலைமையை ஒப்பிடு செய்து உங்கள் ஸ்டைலில் நீங்கள் பிரசாரம் செய்ய வேண்டும். அதோடு, உங்கள் பகுதிகளில் எத்தனை பேர் நம்முடைய திட்டங்களால் பயனடைந்திருக்கிறார்கள் என்று எடுத்துச் சொல்லுங்கள்.

பொறுப்பும் - கடமையும்

‘எல்லாருக்கும் எல்லாம்’ என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் பார்த்து பார்த்து நாம் திட்டங்களை செய்திருக்கிறோம். நம்முடைய திட்டங்களால், தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ இரண்டரைக் கோடி பயனாளிகள் பயனடைந்திருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளை சிந்தாமல் - சிதறாமல் நம்முடைய கூட்டணிக்கு கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பும் - கடமையும் உங்களுக்குத்தான் இருக்கிறது.

தொண்டர்களின் நம்பிக்கைதான் நம்முடைய முதல் பலம்

அதேபோன்று, தொண்டர்களின் நம்பிக்கைதான் நம்முடைய முதல் பலம். என் இயக்கம் - என் கட்சி - என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம்முடைய தொண்டர்கள். “நானும் - என் குடும்பமும் கழகத்துக்காக இருக்கிறோம். கழகம் எனக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருக்கிறது” என்ற எண்ணம்தான், இந்த இயக்கம் 75 ஆண்டுகளாக நிலைத்திருக்க அடிப்படை காரணம்! அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

ரூ.10 லட்சம் நிவாரணம்

கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்.

நான் உங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொள்வது, பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளும், அவர்கள் சொல்வதை நிறைவேற்றும் தொண்டர்களும்தான் கழகத்தின் வலிமை. நிர்வாகிகளை, தொண்டர்கள் முன்னோடிகளாக கருத வேண்டும்.

தொண்டர்கள் இல்லாமல் எந்த இயக்கமும் இருக்க முடியாது

தொண்டர்கள் இல்லாமல் எந்த இயக்கமும் இருக்க முடியாது. அதேபோல் நிர்வாகிகள் இல்லாலும் செயல்பட முடியாது. இருவருமே நம்முடைய கொடியில் இருக்கும் கருப்பு சிவப்பு போன்று, ஒற்றுமையாக செயல்பட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் - தங்களுக்குக் கீழ் இருக்கும் நிர்வாகிகளையும், பொறுப்பாளர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். தாங்கும் தூண்கள் இல்லாமல், கோபுரம் நிற்க முடியாது என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

தில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது: மு.க.ஸ்டாலின்

இளைஞர்களால் உருவான இயக்கம்

திமுக என்ற இயக்கம் தொடங்கும்போதே, இளைஞர்களால் உருவான இயக்கம். பேரறிஞர் அண்ணாவுக்கு அப்போது 40 வயது, கருணாநிதிக்கு 25 வயது, பேராசிரியருக்கு 27 வயது, நாவலர், மதியழகன் அனைவருமே இளைஞர்கள்தான். அவர்கள்தான் அரசியல் களத்திலும், போராட்டக் களத்திலும் முதன்மையாக நின்று பல இளைஞர்களை ஈர்த்தார்கள். கழகத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். அதுபோன்றுதான், இங்கே உள்ள நிர்வாகிகளும் இளைஞர்களை கட்சியில் ஊக்கப்படுத்த வேண்டும்.

வெற்றியை எளிதாக அடையலாம்

கழகத்தில் இப்போது 23 அணிகள் இருக்கிறது. புதிதாக இரண்டு அணிகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலான அளவில், நிர்வாகிகள் போடப்பட்டிருக்கிறார்கள். இன்னும் நிரப்பப்படாத பொறுப்புகளில் இளைஞர்களை நியமனம் செய்யுங்கள். அணிகள் அனைத்துமே, தாய்க் கழகத்திற்கு வலு சேர்க்கத்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இளைஞர்களுக்கு வாய்ப்பைக் கொடுங்கள். எந்தளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும். செயல்பாடுகள் வேகமாக இருக்கும். வெற்றி உறுதி செய்யப்படும்.

தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் வந்து உங்களை சந்திப்பார்கள். புதிய நிர்வாகிகள் எல்லாம் சிறப்பாக செயல்பட வேண்டும். 234 தொகுதிகளில் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், அவர்கள் பணிகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்தலை சந்திக்க கழகத்தின் கட்டமைப்புகளை ஓராண்டுக்கு முன்பே முழுமையாக அமைத்துவிட்டோம். இதை வரும் காலங்களில் செயல்படுத்தினாலே பெரிய வெற்றியை எளிதாக அடையலாம்.

முதல் இரண்டு மாதங்களுக்கு, உங்களுடைய முதல் பணி என்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை.

* சிறப்புத் தீர்மானம் இயற்றியபடி, சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ விளக்கம் கொடுத்தபடி, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறோம்.

* வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும். திமுகவின் திட்டங்களை, சாதனைகளை, உரிமைப்போராட்டங்களை எடுத்துச் சொல்லுங்கள்.

இன்றைய நிலையில் கழக ஆட்சியின் திட்டங்கள் சென்று சேராத குடும்பமே தமிழ்நாட்டில் இருக்காது. ஒவ்வொரு குடும்பத்திலும் திமுகவுக்கு மகத்தான ஆதரவு இருக்கிறது. அவர்களில் ஆர்வமுள்ளவர்களை கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான படிவத்தை, விரைவில் அறிவாலயத்துக்கு வந்து பெற்று செல்ல வேண்டும். இந்தப் பணியை நானே தொடர்ந்து ஆய்வு செய்வேன். இங்கு வந்திருக்கும் நிர்வாகிகளுக்கு நான் போன் மூலமாக, தொடர்பு கொண்டு பேசுவேன். அப்போது எவ்வளவு உறுப்பினர் சேர்க்கை செய்திருக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்ல வேண்டும். இந்தப் பணியை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

என் தொகுதி வெற்றித் தொகுதி

என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் அனைவரும் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். என் வாக்குச்சாவடியில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பேன் - என் தொகுதி - வெற்றித் தொகுதி என்ற உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டை காப்பாற்றும் வலிமையான தலைமை

பாஜகவிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் கட்சி கட்டமைப்பும், கொள்கை பிடிப்பும், வலிமையான தலைமையும், நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது என்று தமிழ்நாட்டில் இருக்கும் சின்ன குழந்தைக்குக்கூட தெரிந்திருக்கிறது.

ஆனால், தேர்தல் வெற்றிக்கு இதுமட்டும் போதாது! பூத் அளவில் வெற்றி பெறும் வாக்குகள்தான் தொகுதியில் வெற்றிபெற வைக்கும். தொகுதிகளை வென்றால்தான் ஆட்சி. அதனால், பூத் அளவிலான மைக்ரோ மேனேஜ்மெண்டும் மிக முக்கியம்.

தமிழ்நாடு முழுவதும் எத்தனை உட்கட்டமைப்பு பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். அதெல்லாம் தொய்வில்லாமல் சொன்ன தேதியில் முடிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றால், மீண்டும் நம்முடைய ஆட்சிதான் வர வேண்டும் என்று புரிய வையுங்கள்.

ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்ன என்றால், கழக நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரிவாக பேசுவோம்.

ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பொறுப்பை நான் வழங்கியிருக்கிறேன். அதை சிறப்பாக - எந்த விமர்சனமும் இல்லாமல், செய்து காட்டினால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது.

எனக்குத் தெரிந்தது அரசியல் மட்டும்தான்

எனக்குத் தெரிந்தது, அரசியல் மட்டும்தான். தலைவர் கருணாநிதியாக இருந்தால், கவிதை எழுதுவார்; கதைகள் எழுதுவார்; சினிமா வசனம் எழுதுவார்; இலக்கிய மேடைகளில் கலக்குவார். ஆனால், நான் அரசியல் – அரசியல், உழைப்பு – உழைப்பு என்று வளர்ந்தவன். டிவி பார்த்தால்கூட, நியூஸ் சேனல்தான் பார்ப்பேன். சமூக வலைதளங்களை பார்த்தாலும், அரசியல் செய்திகள், பேட்டிகளைத்தான் பார்ப்பேன்.

வெற்றிச் செய்தியை தாருங்கள்

ஒருவரை நம்பி பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் அவர்கள் அதை சிறப்பாக செய்ய வேண்டும். “தலைவர் சொன்ன பணியை முடித்துவிட்டோம், வெற்றி பெற்றுவிட்டோம்” என்று சொல்ல வேண்டும். நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது, அந்த வெற்றிச் செய்தியை மட்டும்தான். நான் கொடுத்த பொறுப்பை, சரியா செய்து அந்த வெற்றிச் செய்தியை தாருங்கள் என்றார்.

‘யாா் அந்த சாா்’ கேள்வி எழுப்பினால் இனி நீதிமன்ற அவமதிப்பு!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனைத் தவிா்த்து வேறு எவருக்கும் தொடா்பு இல்லை என்றும், ‘யாா் அந்த சாா்’ எனகேள்வி எழுப்பினால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும்... மேலும் பார்க்க

குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை!

குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு பெண்கள்... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை: செய்திகள் நேரலை

எந்தெந்த குற்றத்துக்கு எவ்வளவு தண்டனை?அண்ணா பல்கலை மாணவியை கடுமையாக தாக்கியதற்காக 7 ஆண்டுகள், ஆதாரங்களை அழித்தற்கு 3 ஆண்டுகள், தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறியக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை ... மேலும் பார்க்க

5 நாள் அரசுமுறைப் பயணமாக பியூஷ் கோயல் பிரான்ஸ், இத்தாலி பயணம்

புது தில்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து 2 நாள் அரசுமுறைப் பயணமாக இத்தாலி ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு!

சென்னை: கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன.தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்ப... மேலும் பார்க்க