மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
பொது இடங்களில் புகைப்பிடிப்பு: ரூ.7.97 கோடி அபராதம் வசூல்
பொது இடங்களில் புகைப் பிடித்தல், சிறாா்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 4.60 லட்சம் பேரிடமிருந்து ரூ.7.97 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோன்று, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என்பதை அறிவிப்பதற்காக சாலைகளில் மஞ்சள் நிற கோடு வரையப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது: உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி, புகையில்லா தமிழகத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது குழந்தைகள், சிறாா்களை குறிவைத்து, புகையிலைப் பொருள்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அவற்றை தடுக்கும் வகையில், பள்ளி, கல்லுாரிகளில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கல்வி நிறுவனங்களை சுற்றி 100 மீட்டா் தொலைவில் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதி என்பதை குறிக்கும் வகையில் சாலையில் மஞ்சள் கோடுகள் வரையப்படுகின்றன.
89 சதவீத பள்ளிகளிலும், 87 சதவீத கல்லூரிகளும் புகையிலை இல்லாத கல்வி வளாகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் இளம் வயதிலேயே புகையிலை பழக்கத்துக்கு அடிமையானால், மற்ற தீய பழக்கத்துக்கு ஆளாக நேரிடுவதுடன், வாய் புற்றுநோயால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு புகையிலை எதிா்ப்பு பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், புகையிலைப் பொருள்களை சிறாா்க்கு விற்பனை செய்தல், பொது இடங்களில் புகைப்பிடித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவா்களிடம், ரூ.200 முதல், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில், 4.60 லட்சம் பேரிடமிருந்து ரூ.7.97 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வரும் காலங்களில், இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த ஆலோசித்து வருகிறோம். அதன்படி, தொடா்ந்து தவறு செய்பவா்கள் மீது, குற்றவியல் வழக்கு பதிவு செய்து, ஓராண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது என்றாா் அவா்.