கொண்டாடவே சென்றார்கள்.. சாக அல்ல.. சின்னசாமி அரங்கில் நடந்தது என்ன?
மின் தடை: நீட் மறுதேர்வு நடத்த முடியாது- மத்திய அரசு திட்டவட்டம்
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில், நீட் தேர்வு எழுதுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மின் தடையால் தேர்வெழுதிவதில் சிக்கல்களை சந்தித்ததாகக் கூறி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு (2025) பல்வேறு மையங்களில் கடந்த மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கிய நிலையில், கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த மையத்தில் தோ்வெழுதிய மாணவா்கள் மிகவும் சிரமப்பட்டனா். இதனால், தங்களுக்கு மறு தோ்வு தேவை என ஆவடி தோ்வு மையத்தில் தோ்வெழுதிய மாணவா்கள் சிலர் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தோ்வு எழுதியதாகவும், கவனச் சிதறலால் முழு திறமையுடன் தோ்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தோ்வு தேவை எனவும் மாணவா்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரரிக்கப்பட்டு வரும் நிலையில், மறு தேர்வு நடத்துவதற்கான சாத்தியம் குறித்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தோ்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், அதுவரை நீட் தோ்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடையும் விதித்திருந்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மின் தடையால் நீட் தேர்வெழுதுவதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்பதால், மறு தேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்டுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பை ஜூன் 6ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
நீட் தோ்வின் முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.