மத்திய அரசின் பேனர் அகற்றம்: ஆட்சியர் அலுவத்தில் பாஜகவினர் முற்றுகை!
மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டுள்ளனர்.
மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாஜகவினர் இன்று (ஜுன் 3) முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதிக்க காவல் துறையினர் மறுத்ததால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜூன் 30 ஆம் தேதியன்று மாதாந்திர மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த முகாமின் போது மத்திய அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரானது கூட்டம் நடக்கும்போதே அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்தும், இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்க வேண்டியும், திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் தலைமையில், பாஜகவினர் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியார் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி 5 பேரை மட்டும் உள்ளே அனுமதிப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் உள்ளே செல்ல வேண்டும் எனக் கூறியதுடன், அந்த அலுவலகம் திமுகவினருக்கு மட்டும் சொந்தமானதா எனப் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால், அந்தக் கூட்டத்தில் லேசான சலசலப்பு எழுந்தது. தொடர்ந்து போலீஸார் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததால், ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களிடம் மாவட்ட ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை, நடவடிக்கையாக ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க:ஜூன் இறுதியில்.. ராயபுரம் ரயில் நிலையம் அருகே தற்காலிக பேருந்து நிலையம்!