இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு
'70+ வயதினருக்கு மத்திய அரசு வழங்கும் இலவச ரூ.5 லட்சம் காப்பீடு' - எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் இயங்குவது தான் 'ஆயுஷ்மான் வயோ வந்தனா' திட்டம்.
இதில் ஒரு குடும்பத்தில் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீட்டைப் பெறலாம்.

யார் உதவி பெறலாம்?
70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள இந்திய குடிமக்கள் இந்தத் திட்டம் மூலம் பயன்பெறலாம். இந்தத் திட்டத்தில் பயன்பெறுவோரின் பொருளாதார நிலை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
என்ன செய்ய வேண்டும்?
ஆயுஷ்மான் வயோ வந்தனா திட்டத்தில் காப்பீட்டு அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை வைத்து மூத்த குடிமக்கள் எப்போது வேண்டுமானாலும் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டையைப் பெறுவதற்கு ஆதார் அடிப்படையிலான e-KYC செய்ய வேண்டும்.
சிறப்பம்சம் என்ன?
ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தில் உள்ளவர்கள் இதை இரட்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தனியார் காப்பீடு அல்லது பிற அரசு சுகாதாரத் திட்டங்களில் உள்ளவர்கள்கூட இதற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். ஆனால், எந்தத் திட்டத்தின் மூலம் அவர்கள் பயன்பெற விரும்புகிறார்களோ அந்த ஒரு திட்டத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற காத்திருப்பு காலம் கிடையாது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சுகாதாரக் காப்பீடு கிடைக்கும்.
27 சிறப்புப் பிரிவுகளில் 1,961 மருத்துவ நடைமுறைகளை உள்ளடக்கியது இது.
13,352 தனியார் மருத்துவமனைகள் உட்பட 30,000-க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை பெறலாம்.

எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்?
ஹீமோடையாலிசிஸ் / பெரிட்டோனியல் டயாலிசிஸ்
முழங்கால் மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்
PTCA மற்றும் இதயமுடுக்கி கருவி பொருத்துதல் உள்ளிட்ட இருதயவியல் சிகிச்சைகள்
பக்கவாதம் மற்றும் புற்றுநோய் பராமரிப்பு
எலும்பியல் அறுவை சிகிச்சைகள்
உள்ளிட்ட பல நோய்கள் இதில் அடங்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
கூகுள் பிளே ஸ்டோரில் ஆயுஷ்மான் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். Log in செய்து ஆதார் மற்றும் மாநிலத் தகவல்களை உள்ளிடவும். பின்னர், அதில் கேட்கப்படும் தகவல்களைப் பூர்த்தி செய்யவும். கடைசியாக, e-KYC சரிபார்ப்பு முடிந்தவுடன் ஆயுஷ்மான் வயோ வந்தனா அட்டையைப் பெறலாம்.