மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது! - கார்கே
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டைத் தவறாக வழிநடத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ள்ளார்.
பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தானின் கருத்தை இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வந்தது.
ஆனால், இன்றைய நேர்காணலில், இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது, பாகிஸ்தான், இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியிருக்கிறதே, அதனை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? என்று கேள்விக்கு பதிலளித்த இந்திய முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான், ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.
அந்தப் பதிவில், “முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகானிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் உடனடியாகக் கூட்டப்பட்டால் மட்டுமே இவற்றைக் கேட்க முடியும். மோடி அரசு நாட்டைத் தவறாக வழிநடத்தியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி! - பிரதமர் மோடி