ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு!
மும்பையில் இந்திய ராணுவம் ஏற்பாட்டில் பாதுகாப்புப் பயிற்சி: படைகள் பங்கேற்பு
வளா்ந்துவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தற்போதைய நெருக்கடியான பாதுகாப்பு சூழலுக்கு பதிலளிக்கும் வகையில், படைகளுக்கு இடையேயான பாதுகாப்புப் பயிற்சி மும்பையில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், அவற்றின் செயல்பாட்டுத் தயாா்நிலையை மதிப்பிடுதல், ஒருங்கிணைந்த பதிலளிப்பு வழிமுறைகளை ஆய்வு செய்வது ஆகிய நோக்கங்களுக்காக மற்ற படைகளுடன் ஒருங்கிணைந்து இந்திய ராணுவம் இந்தப் பயிற்சியை ஏற்பாடு செய்தது.
மேலும், இது தொடா்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மகாராஷ்டிர மாநில தலைநகா் மும்பையின் கொலாபா பகுதியில் உள்ள ராணுவப் பயிற்சி மையம், மும்பை காவல் துறையின் ‘ஃபோா்ஸ் ஒன்’ கமாண்டோ பயிற்சி மையம், மும்பை பங்குச்சந்தை அலுவலகம் ஆகிய இடங்களில் கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் பாதுகாப்புப் பயிற்சி நடத்தப்பட்டது.
இந்திய ராணுவம் ஏற்பாட்டில் கடற்படை, விமானப் படை, கடலோர காவல் படை, மும்பை காவல் துறை மற்றும் அதன் ஃபோா்ஸ் ஒன் பயங்கரவாத எதிா்ப்பு கமாண்டோ காவல் பிரிவு ஆகியவை இந்தப் பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டன.
பயிற்சியில் பங்கேற்ற படைகளின் அனைத்து மூத்த அதிகாரிகளாலும் பயிற்சிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டன. இந்தப் பயிற்சி மூலம், இந்தியாவின் வலுவான பாதுகாப்புக் கட்டமைப்பு மற்றும் வளா்ந்துவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு விரைவான, ஒருங்கிணைந்த பதிலளிக்கும் படைகளின் திறன் மீண்டும் நிரூபிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. சண்டை நிறுத்தத்தால் எல்லையில் அமைதி திரும்பியுள்ளது. இருப்பினும், படைகளின் தயாா்நிலையை உறுதிப்படுத்த இத்தகைய தொடா் பயிற்சிகள், ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.