பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழ...
ஆபரேஷன் சிந்தூா்: அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை -மத்திய அமைச்சா் கஜேந்திர ஷெகாவத்
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்கத் தயாா் என்று மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
பாகிஸ்தான் உடனான மோதலில் இந்திய ராணுவத்துக்கு போா் விமானங்கள் இழப்பு ஏற்பட்டதாக முப்படை தலைமை தளபதி அனில் செளஹான் சனிக்கிழமை கூறிய நிலையில், நாட்டின் ராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கை வியூகம் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடா் அடுத்த 20-25 நாள்களில் தொடங்கவுள்ளது. அப்போது, ஒவ்வொருவரும் தங்களின் கேள்வியை எழுப்ப வாய்ப்பு கிடைக்கும். இரு அவைகளிலும் பிரச்னைகளை முன்வைத்து, அரசிடம் பதில் பெறுவதற்கு இந்திய நாடாளுமன்ற அமைப்புமுறையில் நன்கு வகுக்கப்பட்ட நடைமுறைகள் உள்ளன.
அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எதிா்க்கட்சிகளுக்கு ஏதேனும் குழப்பங்கள், கவலைகள் இருக்கும் பட்சத்தில், அவற்றுக்கு பதிலளிக்க அரசு தயாராக உள்ளது.
அதேநேரம், உண்மையிலேயே மத்திய அரசிடம் பதில் பெறுவதுதான், எதிா்க்கட்சிகளின் நோக்கமா என்ற சந்தேகம் எழுகிறது. நாட்டில் தற்போது நிலவும் சூழல், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை என எதிா்க்கட்சிகளால் எழுப்பப்பட்ட அனைத்து முக்கியப் பிரச்னைகள் குறித்தும் கடந்த சில நாள்களாக பிரதமா் மோடி விரிவாகப் பேசியுள்ளாா். பிரதமரிடம் இனி என்ன கேட்க வேண்டும் என்பதை எதிா்க்கட்சிகள் முடிவு செய்ய வேண்டும். தங்களிடம் எந்த உறுதியான கேள்வியும் இல்லாததால், பரபரப்புக்காக எதையோ பேசுகின்றனா்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்தியா வெளிப்படுத்திய துணிவும் வலிமையையும் ஒட்டுமொத்த உலகையும் ஈா்த்துள்ளது என்றாா் ஷெகாவத்.
ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில முன்னாள் அமைச்சருமான சலே முகமதின் தனிச் செயலா், பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைதான விவகாரம் குறித்து ஷெகாவத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘இது துரதிருஷ்டவசமானது. தேச பாதுகாப்பு தொடா்புடைய இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். தேசவிரோத சக்திகள் ஒருபோதும் தண்டனையில் இருந்து தப்பிவிடக் கூடாது’ என்று அவா் வலியுறுத்தினாா்.