அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: மா.சுப்பிரமணியனை குற்றம்சாட்டிய அண்ணாமலை - அமைச்சரின் ரியாக்ஷன் என்ன?
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், ``ஞானசேகரன் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தபிறகு இரவு 8.30 மணிக்கு மேல அமைச்சர் மா.சுப்பிரமணியனும், கோட்டூர் சண்முகமும் பேசுகிறார்கள். மறுபடியும் 8.32 மணிக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியனும், கோட்டூர் சண்முகமும் பேசுகிறார்கள்.

இதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எதற்காக? யாரை காப்பாற்றுவதற்காக இவ்வளவு பதட்டம்? அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்?" என அண்ணாமலை சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் அண்ணாமலை அவர்மீது வைக்கப்பட்டிருந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், " அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அந்த சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழகக் காவல்துறை மிகச்சிறப்பாக நடவடிக்கை எடுத்து ஐந்து மாதக்காலத்தில் தண்டனையைப் பெற்று தந்திருக்கிறது. அண்ணாமலை சொல்லியிருப்பதை நானும் பார்த்தேன்.

சண்முகம் என்ற வட்ட செயலாளரிடம் பேசினேன் என்கிறார். நான் ஒரு மாவட்ட செயலாளர். என்னிடம் 83 வட்ட செயலாளர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். தினமும் 10, 15 பேர் எனக்கு போன் பண்ணுவார்கள்.
இந்த மணிக்கு மா.சுப்ரமணியனுக்கு சண்முகம் போன் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருக்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என்று எனக்கும் தெரியவில்லை. அவருக்காவது தெரியுமா என்று தெரியவில்லை" என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்திருக்கிறார்.