8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!
புது தில்லி: பஞ்சாபில் பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சண்டீகரில் உள்ள் ஹல்லோ மஜ்ரா பகுதியில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி 19-ஆம் தேதி ஹல்லோ மஜ்ரா பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மாயமான அந்தச் சிறுமி, ஜனவரி 21-ஆம் தேதி நள்ளிரவில் அவரது வீட்டின் அருகே, உடலில் பல வெட்டுக் காயங்களுடன் ஆடையின்றி குப்பைகளுக்கு மத்தியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து, சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் உதவியுடன் குற்றவாளியை போலீஸார் தேடி வந்தனர்.
இந்தநிலையில், சிறுமியின் வீடு அமைந்துள்ள பகுதியிலுள்ள குற்றவாளியின் வீட்டின் வெளியே அந்தச் சிறுமியின் செருப்பு இருந்தது இந்த வழக்கில் துப்பாக அமைந்தது. அந்த வீட்டில் வசித்துவந்த பெயிண்டிங் தொழிலாளியான ஹீரா லால் குட்டு தலைமறைவானதைத் தொடர்ந்து அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஏழு நாள்களுக்குப் பின், பிகாரில் பதுங்கியிருந்த ஹீரா லால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியை பூர்வீகமாகக் கொண்ட ஹீரா லால் குட்டுவுக்கு இரு மனைவிகளும் 5 குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. அவரது மூத்த மகளுக்கு வயது 13.
இதனைத்தொடர்ந்து குற்றவாளி மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் இன்று(ஜூன் 3) சண்டீகர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற ஹீரா லால் குட்டு குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ள நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.