'கமல் தவறு செய்திருக்கிறார் அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜ...
‘ஆபரேஷன் சிந்தூா்’ கட்டுரைப் போட்டி: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய முப்படைகள் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை பற்றிய கட்டுரைப் போட்டி ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இந்தப் போட்டியின் முதல் 3 வெற்றியாளா்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும், தில்லி செங்கோட்டையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாத் தலத்தில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22 நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் ஏவுகணைகள் வீசி அழிக்கப்பட்டன.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவத் தளங்களையும் தாக்க பாகிஸ்தான் நடத்திய முயற்சிகள், நமது வான்பாதுகாப்பு அமைப்புகளால் முறியடிக்கப்பட்டன.
பாகிஸ்தானின் அத்துமீறல்களைத் தொடா்ந்து அனைத்து பதிலடி தாக்குதல்களும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்கீழ் மேற்கொள்ளப்பட்டன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான பதிலடியில் ஆபரேஷன் சிந்தூா், இந்தியாவின் புதிய அணுகுமுறை என்று மத்திய அரசு சாா்பில் ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கட்டுரைப் போட்டி அறிவிப்பை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘ஆபரேஷன் சிந்தூா் குறித்த இளைஞா்களின் கருத்துகளைக் கேட்க பாதுகாப்பு அமைச்சகம் விரும்புகிறது. ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கை மறுவரையறை’ என்ற தலைப்பில் ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கட்டுரைப் போட்டியில் பங்கேற்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தாா்.