'என் மனச நல்லா வச்சுக்குற டீம்ல ஆட நினைச்சேன்...' - கொல்கத்தாவை மறைமுகமாக சாடிய ஸ்ரேயாஸ் ஐயர்?
'பஞ்சாப் வெற்றி!'
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. பஞ்சாப் அணியின் சார்பில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களை அடித்திருந்தார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. அவர் போட்டிக்குப் பிறகு சில முக்கியமான விஷயங்களையும் பேசியிருந்தார்.

அவர் பேசியதாவது, ''எனக்கு இதே மாதிரியான முக்கியமான பெரிய தருணங்களில் பேட்டிங் ஆடுவது பிடிக்கும். இதே மாதிரியான பெரிய போட்டிகளில் நாம் எவ்வளவு அமைதியாக இருக்க வேண்டுமோ அவ்வளவு அமைதியாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லாரிடமும் சொல்வேன். வீரர்கள் பொறுப்பை உணர்ந்து முதல் பந்திலிருந்தே இன்டன்ட்டோடு ஆட வேண்டும் என்று கூறியிருந்தேன்.
சில வீரர்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அதை அவர்களால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. எனக்குமே ஆரம்பத்தில் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. எனக்கு மறுமுனையிலிருந்து பேட்டர்களின் ஒத்துழைப்பு கிடைத்துக் கொண்டே இருந்தது. நான் அதிக நேரத்தை களத்தில் செலவிட்டால் நல்ல இன்னிங்ஸை ஆட முடியும் என தெரியும்.

மன ஆரோக்கியம் எனக்கு ரொம்பவே முக்கியம்!
ஆர்சிபிக்கு எதிராக நாங்கள் தோற்றதைப் பற்றி பெரிதாக யோசிக்கவில்லை. சீசன் முழுக்க சிறப்பாக ஆடியிருக்கிறோம். ஒரு போட்டியை வைத்து நாங்கள் இப்படித்தான் என முடிவு செய்துவிட முடியாது. அணியில் உள்ள இளம் Uncapped வீரர்கள் மீது எதையும் திணிப்பதில்லை. அவர்கள் எப்படியோ அப்படியே இருக்க வைக்க விரும்புகிறோம். அவர்களிடம் அனுபவம் இல்லையென்றாலும், ஒருவித பயமறியா குணம் இருக்கிறது. அதுதான் எனக்கு தேவைப்படுகிறது.

ஏலத்தின் போது எந்த அணிக்கு செல்லப்போகிறோம் என்றெல்லாம் யோசிக்கவில்லை. நல்ல சூழல் உள்ள அணிக்கு சென்றால் போதும் என்றே நினைத்தேன். என்னுடைய மன ஆரோக்கியம் எனக்கு ரொம்பவே முக்கியம். இங்கே பஞ்சாப் அணியில் நான் ரொம்பவே சௌகரியமாக உணர்கிறேன். இந்தத் தருணத்தை கொண்டாட விரும்புகிறேன். இறுதிப்போட்டியை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை. ஆனாலும் எங்களின் வேலை பாதிதான் முடிந்திருக்கிறது.' என்றார்.