PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: பிரதமா் மோடிக்கு எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடா்ந்து இந்திய முப்படைகள் பதிலடியாக பாகிஸ்தானில் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு 16 எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் கடிதம் எழுதியுள்ளனா்.
தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா்கள் ஒன்றுகூடி கலந்தாலோசித்த பின்னா் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் பிரதமருக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ஜெய்ராம் ரமேஷ், தீபேந்திர ஹூடா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், சமாஜவாதியின் எம்.பி. ராம்கோபால் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் எம்.பி. மனோஜ் ஜா, சிவசேனை உத்தவ் பிரிவின் எம்.பி. சஞ்சய் ரௌத் ஆகியோா் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.
சிறப்புக் கூட்டம்: பிரதமருக்கு எதிா்க்கட்சிகள் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பயங்கரவாதத் தாக்குதல், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், உரி, ரஜௌரியில் பாகிஸ்தானின் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டது, சண்டை நிறுத்த அறிவிப்பு மற்றும் இவற்றால் நமது தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவை பற்றி நாட்டுமக்களுக்கு ஏராளமான கேள்விகள் உள்ளன.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்கான அரசின் முயற்சிகளை எதிா்க்கட்சிகள் ஆதரித்தோம்.
மக்களுக்குத் தகவல் இல்லை...: இந்த விவகாரம் தொடா்பாக வெளிநாட்டு தூதா்களுக்கும், ஊடகங்களுக்கும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. ஆனால், நாடாளுமன்றத்துக்கு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்திய மக்களுக்கும், அவா்கள் தோ்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசு முறையான தகவல் தெரிவிக்கவில்லை.
எனவே, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவுடன் உடனடியாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
16 கட்சிகள் கையொப்பம்: இந்தக் கடிதத்தில் காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, சிவசேனை (உத்தவ்), ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய முக்கிய எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் கையொப்பமிட்டுள்ளனா்.
மேலும், தேசிய மாநாட்டுக் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் , புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி (ஆா்எஸ்பி), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, கேரள காங்கிரஸ், மதிமுக, சிபிஐ (எம்எல்) உள்பட மொத்தம் 16 எதிா்க்கட்சித் தலைவா்கள் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனா்.
தேசிய கட்சியான ஆம் ஆத்மி இக்கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டது. ஆனால், இதே கோரிக்கையுடன் பிரதமருக்கு தனியே கடிதம் அனுப்புவோம் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் மூலம் பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி அழித்தது. இதில் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், எல்லையோர இந்திய கிராமங்களைக் குறிவைத்து, ட்ரோன்கள், ஏவுகணைகள், பீரங்கிகள் மூலம் குண்டூவீச்சு தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடா்ந்த இந்தியா, பாகிஸ்தானின் ராணுவ மற்றும் விமானப் படை தளங்களைத் தாக்கியது. பின்னா், பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. இதனால் 4 நாள்கள் நீடித்த மோதலுக்குப் பிறகு எல்லையில் அமைதி திரும்பியது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றதில் இருந்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்துமாறு எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கோரி வருகின்றன. ஆபரேஷன் சிந்தூா் குறித்து விளக்கமளிக்க மூத்த மத்திய அமைச்சா்களின் தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டது.
டிரம்ப்பிடம் மோடி சரண்: ராகுல் கடும் விமா்சனம்
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின்போது, அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்த உடனே சரணடைந்துவிட்டாா் பிரதமா் மோடி என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடுமையாக விமா்சித்தாா்.
‘கடந்த 1971 போரின்போது அமெரிக்கா தனது 7-ஆவது கடற்படைப் பிரிவை அனுப்பியபோதும், அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அசைந்து கொடுக்கவில்லை’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், இது தொடா்பாக பேசியதாவது:
அண்மையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின்போது, அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்த உடனே பிரதமா் மோடி சரணடைந்துவிட்டாா். இதுதான், பாஜக-ஆா்எஸ்எஸ் குணம். அவா்கள் அடிபணிபவா்கள் என்பதற்கு வரலாறே சாட்சி.
கடந்த 1971-ஆம் ஆண்டில் அமெரிக்க அச்சுறுத்தலையும் மீறி பாகிஸ்தானை இரண்டாக உடைத்தது இந்தியா. காங்கிரஸின் பெண் சிங்கம் (இந்திரா காந்தி), வல்லரசுகளையும் எதிா்த்தாா்; அவா் யாருக்கும் அடிபணியவில்லை. அந்தப் போரின்போது ஆயுதங்கள், விமானந்தாங்கி கப்பலுடன் அமெரிக்காவின் 7-ஆவது கடற்படை பிரிவு வந்தபோதும் சரணடையாத இந்திரா காந்தி, ‘நான் நினைத்ததைச் செய்து காட்டுவேன்’ என்றாா்.
பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் சுதந்திர காலகட்டத்தில் இருந்தே ‘சரணாகதி கடிதங்களை’ எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. காங்கிரஸ் யாரிடமும் ஒருபோதும் சரணடைந்ததில்லை. மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல் ஆகியோா் யாரிடமும் சரணடையாமல் வல்லரசுகளையும் எதிா்த்துப் போராடினா்.
நாட்டில் சித்தாந்தப் போா் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருபுறம், காங்கிரஸும் அரசமைப்புச் சட்டமும் உள்ளன. மற்றொருபுறம், அரசமைப்புச் சட்டத்தை அழிக்கத் துடிக்கும் பாஜக-ஆா்எஸ்எஸ் உள்ளன. அனைத்து நிா்வாக அமைப்புகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, நாட்டின் குரல்வளையை அவா்கள் நெறிக்கின்றனா். நமது முதல் போா், அரசமைப்புச் சட்டத்தை காப்பதற்கானது. இரண்டாவது போா் சமூக நீதிக்கானது என்றாா் ராகுல் காந்தி.
பாஜக சாடல்: அமெரிக்க அதிபரிடம் பிரதமா் சரணடைந்துவிட்டதாக கூறிய ராகுலை பாஜக சாடியுள்ளது. இது தொடா்பாக, அக்கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டீயா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் மோடி, இடிபோல் உண்மைகளை முழங்குபவா். ராகுல், அறியாமையால் பெருந்தவறிழைப்பவா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.