Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ஆபரேஷன் ஜல் ரஹாத் - 2: மணிப்பூர் வெள்ளத்தில் சிக்கிய 2,500 பேரை மீட்ட ராணுவம்!
மணிப்பூரில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேர், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க ஆபரேஷ ஜல் ரஹாத் -2 எனும் நடவடிக்கை இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து, பாதுகாப்புத் துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் இன்று (ஜூன் 4) கூறுகையில், கடந்த மே 31 ஆம் தேதி முதல் மணிப்பூரின் கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் இந்திய ராணுவத்தினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அங்கு நிலவும் மோசமான வானிலைகளுக்கு இடையில், சுமார் 2,500-க்கும் மேற்பட்டோரை ராணுவப் படையினர் மீட்டுள்ளனர். இதில், ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவமனையில் சிக்கியிருந்த ஏராளமான நோயாளிகள் உள்பட 778 பேர் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், அங்கு தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டதுடன், மீட்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ முகாம் ஒன்றும் ராணுவப் படையினரால் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு இம்பால் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சொயிபம் லெய்காய் கிராமத்தில், சுத்தமான குடிநீர் இல்லாமல் தவித்த கிராமவாசிகளுக்கு, தற்காலிக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு சுமார் 5,750 லிட்டர் குடிநீர் ராணுவ வீரர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், மீட்புப் படகுகள், மருத்துவக் குழுக்கள் மற்றும் தேவையான அத்தியாவசிய பொருள்களுடன் ராணுவ வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாகவும்; அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோருடன் இணைந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!