சா்வதேச மரபணு சாா் ஆய்வு படிப்பு: இராமச்சந்திரா - அப்பல்லோ ஒப்பந்தம்
புரிதல், அன்பு, உறவுக்காக AI-ஐ விரும்பும் மனிதர்கள்.. சரியான தேர்வா? - உளவியல் நிபுணர் சொல்வதென்ன?
இன்றைய நவீன காலத்தில் ஏஐ முக்கிய பங்காற்றுகிறது. AI தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து டெக் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பல்வேறு துறைகளில் ஏஐயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுகாதாரம், பராமரிப்பு தொடங்கி பொழுதுபோக்கு வரை செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது. பயனர்களுக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு, வசதியாக இருப்பதால் இதனை பெரிதும் விரும்புகின்றனர்.
இந்த செயற்கை நுண்ணறிவு, பொழுதுபோக்கு, வேலைகளில் மட்டுமில்லாமல் மனிதர்களை உறவுகளிலும் ஊடுருவியுள்ளது.
சமீபத்தில் கூட அமெரிக்காவைச் சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் ஒரு ஏஐ சாட்போட்டை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. மனிதர்களைப் போலவே டிஜிட்டல் ஏஐ பார்ட்னர்களும் காதல், உறவு சார்ந்த புரிதலை மனிதர்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால் அங்கு ஒரு உணர்வுகளைக் கடந்த ஒரு உயிரோட்டத்தை அது கொடுக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மெய்க்கு நிகரான ஒரு தேடல்..
2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் siri, Alexa போன்ற குரல்வழி விர்ச்சுவல் அசிஸ்டன்ட்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த அதனை பயன்படுத்தி மகிழ்ந்தனர்.
தற்போது உருவெடுத்திருக்கும் ஏஐ தொழில்நுட்பம், அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது என்று தான் நாம் சொல்ல வேண்டும்.
மெய்க்கு நிகரான ஒரு தேடலை இன்றைய இளைஞர்கள் நாடுகின்றனர். இந்த ஏஐ தொழில்நுட்பத்தை விரும்புவதற்கான முக்கிய காரணமே, ஏஐ சொல்வதை எல்லாம் காது கொடுத்து கேட்கும், மனிதர்களைப் போல் தவறை சுட்டிக்காட்டாமல் அவர்களுக்கு ஆதரவாக மட்டுமே பதில் சொல்லும், வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் தங்களின் துணை என்ன மாதிரியான குணாதிசயங்களுடன் இருக்க வேண்டும் என்பதை முடிவும் செய்து கொள்ளும் வகையில் ஏஐ தொழில்நுட்பங்கள் உள்ளன. அதற்கான வழிகளை சில டெக் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் Andreessen Horowitz எனும் நிறுவனம் இதுபோன்ற சேவையை செய்து வருகிறது.
அதாவது மனிதர்கள் எந்த மாதிரியான AI துணை வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதற்கு ஏற்ற போல் புரோகிராம் செய்து கொடுக்கின்றனர்.
இதற்காகவே சில மாடல்களை முன்கூட்டியே புரோகிராம் செய்து வைக்கின்றனர். அவர்கள் ப்ரோக்ராம் செய்யும் ஏஐ மாடல்கள் அவர்களுக்கு ஏற்றார் போல் இல்லை என்றாலும் பயனர்கள், தங்களுக்கு தேவையான, விருப்பமான வகையில் கோட்டிங் செய்தும் கொடுக்கின்றனர்.
AI உடன் மனித உறவு
இது போன்ற ஏஐ பார்ட்னர்கள் சாட்பாட் ஆக செயல்படும் தன்மையில் இந்த நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது. மனிதர்கள் சொல்வதை புரிந்து கொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
தங்களது துணையர் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதை போல் இந்த சாட்பாட்கள் இயங்குகின்றன. நட்பு ரீதியாக பழகுவது, பொழுதுபோக்கு, தகவல்களை பரிமாறிக் கொள்வது, ரொமான்ஸ் என ஏராளமான கான்செப்ட்களில் இந்த ஏஐ துணைகள் இயங்குகின்றன. இதற்கான வழிகாட்டியை GitHub தளத்தில் தெரிந்து கொள்ளவும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் ‘Replika: My AI Friend’ எனும் சாட்பாட் செயலி மூலமும் பயனர்கள் சாட் செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கற்றல் சூழல் என்ற தலைப்பில் 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பாய்வின்படி, ஏஐ தொழில்நுட்பத்துடன் நட்பு கொள்ள அல்லது நீண்ட கால உறவு கொள்ள மக்கள் விரும்புகின்றனர். பயனர்கள் பாசத்தை மட்டுமில்லாமல் அந்த ஏஐ துணையை உணர்ச்சி ரீதியாகவும் நம்பி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற செயற்கை உணர்வுடன் மனிதர்கள் உறவு கொள்ள நினைக்கையில் என்ன மாதிரியான உளவியல் ரீதியான தாக்கங்களை மனிதர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்து உளவியல் நிபுணர் டாக்டர் சித்ரா அரவிந்த் விகடனுக்கு பகிர்ந்துள்ளார்.

உளவியல் மருத்துவர் சொல்வதென்ன?
மருத்துவர் சித்ரா அரவிந்த் கூற்றுப்படி,
"இந்த உலகமே அன்பால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது, மனிதர்களின் வாழ்க்கையில் உறவு என்பது முக்கியமான தேவையாக உள்ளது. உறவுகளை சார்ந்து தான் நான் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் இன்றைய தலைமுறையினர், உறவுகள் இல்லாத ஒரு வாழ்க்கையை தேடுகின்றனர். நம்பிக்கையின்மை, உறவுகள் மீதான பயம் இன்றைய தலைமுறையினரிடம் அதிகரித்துள்ளது.
அதற்குக் காரணம் அவர்கள் சிறிது வயதில் இருந்தே பார்த்த சம்பவங்கள், அனுபவித்த சம்பவங்கள், என பல காரணங்கள் இருக்கலாம். patriarchy ( ஆணாதிக்கம்) செலுத்தும் ஒரு குடும்பப் பின்னணியை இருந்து வளர்ந்து இருக்கலாம் அல்லது பாலியல் ரீதியான சவால்களை எதிர்கொண்டு இருக்கலாம். இது போன்ற குடும்பப் பின்னணியில் வளரும் தலைமுறையினர், உறவுகள் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள்.
அவர்களிடம் ஒரு சகிப்புத்தன்மையை, புரிதல், அன்பு இவை அனைத்தும் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கு ஒரு மாற்று வழியாக இந்த செயற்கை நுண்ணறிவை எண்ணிகின்றனர்.
தான் நினைத்தபடியான துணைவர் வேண்டும் என்று உறவுகளிலிருந்து வெளியே வந்து இவ்வாறு செயற்கை நுண்ணறிவை தேர்ந்தெடுக்கின்றனர்.
அதற்கு முக்கிய காரணம், ஏஐ துணை, அவர்கள் நினைத்தபடியும் ஆதரவுடன் வாயை மூடி சொல்வதை மட்டும் கவனிக்கும் திறனுடன் இருப்பதால் மக்கள் அதனை நாடி செல்கின்றனர்.

ஆனால் ஒரு உளவியல் நிபுணராக இது சரியான தேர்வு இல்லை என்றுதான் நான் சொல்வேன். ஆரம்பத்தில் இது போன்ற மாற்று வழிகள் அவர்களுக்கு நினைத்தபடியையும் ஆறுதல் தருவதாகவும் இருக்கும், ஆனால் காலப்போக்கில் ஒரு வெறுமையை உணர்த்தும். நமக்கென்று யாருமே இல்லை என்று உணர வைக்கும். உதாரணத்திற்கு வீட்டில் தனியாக எத்தனை நாட்கள் அடைந்தே இருக்க முடியும். ஒருவகையான மனசோர்வு உண்டாகிவிடும். இதன் உச்சகட்டத்தை அடைவோர் தான் தற்கொலை, மனநோய் போன்ற பிரச்னைகளில் சிக்கிக் கொள்கிறார்கள். எத்தனை செயற்கை நுண்ணறிவு வந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர மனிதர்களுக்கு ஈடு இணையாக அல்லது அதற்கான ஒரு மாற்று வழியாக அதனை கருதக்கூடாது.
மனிதர்களின் ஒரு தேவையாக உறவுகள் உள்ளது. இந்த தேவை ஒரு நிரந்தரமான ஒன்று, இதற்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு போன்ற விஷயங்களை மக்கள் நாடும் போது ஒரு தற்காலிக மாற்று வழியில் செல்கின்றனர். செயற்கை முறையில் ஆக்சிஜன் வைத்தால் எவ்வளவு நாள் உயிர் வாழ முடியும் அதுபோன்றுதான், தற்காலிகமான வழி ஒரு நிரந்தர தீர்வாக இருக்காது. மனச்சோர்வு, மன நோய் போன்ற விஷயங்களில் நாமாகவே சிக்கிக் கொள்ளக் கூடாது” என்று எச்சரிக்கிறார் மருத்துவர் சித்ரா அரவிந்த்.