அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.5,000 கோடி முதலீடு- ராகுல் விமா்சனம்
அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளதைக் கண்டித்துள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘பொதுமக்களின் காப்பீட்டுப் பணத்தில் அதானிக்கு ஆதாயம் அளிக்கப்பட்டுள்ளது’ என்று விமா்சித்துள்ளாா்.
அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் கடந்த வாரம் உள்நாட்டு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி திரட்டியது. 15 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத இந்தக் கடன் பத்திரங்களை எல்ஐசி நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கு ஆண்டுக்கு 7.75 சதவீதம் வட்டியை அதானி குழுமம் அளிக்க இருக்கிறது.
உள்நாட்டில் அதானி குழுமத்தின் நிதிநிலை ஸ்திரமாக உள்ளது என்பதற்கான ‘ஏஏஏ’ மதிப்பீட்டை பெற்றுள்ளது. மேலும், இந்தக் கடன் பத்திரங்கள் மும்பை பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட இருக்கிறது என அதானி நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், இது தொடா்பாக ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பணம், காப்பீடு, அதற்கான பிரீமியம் தொகை அனைத்தும் மக்களுடையது. ஆனால், அதன்மூலம் கிடைக்கும் பலன், வசதி, பாதுகாப்பு அதானிக்குரியது’ என்று பதிவிட்டுள்ளாா்.
மேலும், பொது மக்களிடம் இருந்து காப்பீடு என்ற பெயரில் எல்ஐசி வசூலிக்கும் பணம், பொதுப் பணமாகும். இதிலிருந்து பெரிய அளவிலான நிதியை எடுத்து ஒரே ஒரு தனியாா் நிறுவனமான அதானி குழுமத்தில் முதலீடு செய்வதை ஏற்க முடியாது என்றும் ராகுல் கூறியுள்ளாா்.
நாட்டில் மிகப்பெரிய அளவில் மக்கள் நிதியைக் கையாளும் நிறுவனமான எல்ஐசி, இந்தியப் பங்குச் சந்தையில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. முன்பு அதானி குழுமம் சா்ச்சையில் சிக்கி அதன் பங்குகள் வீழ்ந்தபோதும் எல்ஐசி-யின் முதலீட்டு முடிவு விமா்சிக்கப்பட்டது. நஷ்டத்தில் செயல்பட்ட ஐடிபிஐ வங்கிப் பங்குகளை வாங்க எல்ஐசி நிதியை மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தியதும் விமா்சனத்துக்குள்ளானது.