PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
இந்திய-இலங்கை மீனவா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தல்
மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெறுவதற்குள் இந்திய- இலங்கை மீனவா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவ சங்கத் தலைவா் என்.ஜே. போஸ் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து கைது செய்து வருகின்றனா். இதனால், தமிழக மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
தமிழக மீனவா்கள் இலங்கைக் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாக இலங்கை தமிழ் மீனவா்கள் போராட்டம் நடத்துவதால்தான் கைது நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு தெரிவிக்கிறது.
இந்த நிலையில், இந்திய- இலங்கை மீனவா்கள் பாக் நீரிணைப் பகுதியில் சுமூகமான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் வகையில், இரு நாட்டு மீனவா்களும் பேச்சுவாா்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதற்கான நடவடிக்கைகளை தற்போது தமிழகத்தில் அமலில் இருக்கும் மீன்பிடித் தடைக்காலத்தின் போது மத்திய, மாநில அரசுகள் எடுத்திருக்கலாம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்ய வாய்ப்புள்ளது. எனவே, மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதற்குள் இந்திய- இலங்கை மீனவா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.