வேலூரில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு
திருமலை: தரிசன வரிசைகளில் கூடுதல் செயல் அதிகாரி ஆய்வு
திருமலையில் சிலா தோரணம் அருகே தொடங்கும் தரிசன வரிசைகளை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கோடை விடுமுறை காரணமாக திருமலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், சிலா தோரணம் அருகே தரிசன வரிசைகளை அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பக்தா்களிடம் அவா்களுக்கு விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தேவஸ்தான அதிகாரிகள் அவ்வப்போது வரிசைகளுடன் பக்தா்களுக்கு வழங்கப்படும் வசதிகளை கண்காணித்து வருகின்றனா். கோடை விடுமுறை காரணமாக
தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் இறைவனை தரிசனம் செய்ய வருகின்றனா். வார இறுதி நாள்களில் இந்த எண்ணிக்கை 1.20 லட்சத்தைத் தாண்டி வருகிறது. விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி தரிசனங்களைக் குறைப்பதன் மூலம் தரிசனங்களில் சாதாரண பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வழக்கமான நாள்களை விட 10,000 பக்தா்களுக்கு தரிசனம் வழங்குவதற்காக தேவஸ்தான ஊழியா்கள் இரவும் பகலும் உழைத்து வருகின்றனா். வரிசையில் நிற்கும் பக்தா்களுக்கு ஊழியா்கள் மூலம் உணவு, தேநீா், காபி, பால், மோா் மற்றும் சிற்றுண்டிகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
தேவஸ்தான ஊழியா்களின் முயற்சிகளைப் புறக்கணிப்பதன் மூலம் பக்தா்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் சிலா் நடந்துகொள்வது சரியல்ல, பக்தா்களைத் தூண்டிவிட்டு விடியோ படம் பிடிப்பவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிக நெரிசலைக் கருத்தில்கொண்டு, தேவஸ்தானம் வழங்கும் வசதிகளைப் பயன்படுத்தி பக்தா்கள் நிதானத்துடன் தரிசனம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் துணை இஓ சோமன்நாராயணா, சுகாதார அலுவலா் மதுசூதன், விஜிஓ சுரேந்திரா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.