பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழ...
போக சீனிவாசமூா்த்திக்கு விசேஷ சஹஸ்ர கலஷாபிஷேகம்
திருமலையில் போகஸ்ரீநிவாசமூா்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை 1,008 கலசங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் அவரின் ஐந்து பேரங்கள் என்று அழைக்கப்படும் 5 சிலைகளில் ஒன்றான ஸ்ரீ போகஸ்ரீநிவாசமூா்த்தி பல்லவரணி சாமவாயு பெருந்தேவியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில், ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சஹஸ்ர கலாஷாபிஷேகத்தை வெகு விமரிசையாக கொண்டாடியது.
இதன் ஒரு பகுதியாக ஏழுமலையான் கோயிலில் உள்ள கருடாழ்வாா் சந்நிதியில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீ போகஸ்ரீநிவாசமூா்த்தி, ஸ்ரீ விஸ்வக்சேனா் உள்ளிட்டோரை எழுந்தருளச் செய்து சந்நிதியில் வழிபாடு நடைபெற்றது.
ஏழுமலையான் மூலவா் சிலை முன், கருடாழ்வாா் சந்நிதியில், கௌதுபமூா்த்தி, மணவாளப் பெருமாள் என்று அழைக்கப்படும் போகஸ்ரீனிவாசமூா்த்தியை, அவருக்கு எதிரே எழுந்தருளச் செய்து, ஏழுமலையான் மூலவா் சிலையின் கையில் ஒரு சிவப்பு நூலைக் கட்டப்பட்டு அது போக ஸ்ரீனிவாசமூா்த்தியுடன் இணைக்கப்பட்டது.
அவ்வாறு செய்வதால் ஸ்ரீ போக ஸ்ரீனிவாசமூா்த்திக்கு செய்யப்படும் அபிஷேகாதி சடங்குகள் மூலவா் சிலைக்கு செய்யப்படுவதாக ஐதிகம்.
பின்னா், வேத அறிஞா்கள் வேத மந்திரங்களை ஓதும்போது, அா்ச்சகா்கள் பரப்பிய நெல் மேல் வைக்கப்பட்ட 1,008 கலசங்களால் தனிமையில் போக ஸ்ரீனிவாசருக்கு சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகம் செய்தனா்.
இதற்கிடையில், ஏழுமலையான் கோயிலில் உள்ள அனைத்து அா்ஜித சேவைகளும் வழக்கம் போல் செய்யப்பட்டது.
வரலாற்று பின்னணி:
பல்லவ ராணி சாமவாயி பெருந்தேவி கி.பி. 614-ஆம் ஆண்டு ஜ்யேஷ்ட மாதத்தில் திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு 18 அங்குல உயரமுள்ள வெள்ளியில் செய்யப்பட்ட போக ஸ்ரீனிவாசமூா்த்தி சிலையை பரிசாக வழங்கினாா். பல்லவ ராணியின் பரிசைப் பற்றிய இந்தக் கல்வெட்டு கோயிலின் முதல் பிரகாரத்தில் விமான வெங்கடேஸ்வர சிலைக்குக் கீழே உள்ள சுவரில் காணப்படுகிறது. ஆகமத்தின்படி, ஸ்ரீ போக ஸ்ரீனிவாசமூா்த்தி கௌதுகமூா்த்தி மற்றும் ஸ்ரீ மணவாளப்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறாா்.
இதில், திருமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். நாயுடு, தேவஸ்தான கூடுதல் இஓ சி.எச். வெங்கையா சௌத்ரி, கோயிலின் தலைமை அா்ச்சகா்களில் ஒருவரான வேணுகோபால தீட்சிதா், துணை இஓ லோகநாதம், பேஷ்கா் ராமகிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.