தேர்தல் பத்திரம்: நன்கொடை அளித்த நிறுவனத்திற்கு டெண்டர்? உச்ச நீதிமன்ற தலையீட்டால் பணிந்த மகா. அரசு
மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்திலிருந்து மும்பையின் மேற்கு பகுதியில் இருக்கும் பயந்தர் என்ற இடத்தை இணைக்கும் விதமாக, மலை மற்றும் வனவிலங்குகள் வாழக்கூடிய வனப்பகுதி வழியாகப் பூமிக்கு அடியில் சுரங்க சாலை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் மேஹா எஞ்சினியரிங் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதற்குத் தொழிற்நுட்ப டெண்டர் விடப்பட்டது.
இந்த டெண்டர் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி திறக்கப்பட்டது. இதில் மேஹா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் டெண்டர் விதிகளை மும்பை மெட்ரோபாலிட்டன் மேம்பாட்டு ஆணையம் சரியாகப் பின்பற்றவில்லை என்று எல் அண்ட் டி நிறுவனம் குற்றம் சாட்டி இருந்தது.
ஆனால் எல் அண்ட் டி நிறுவனம் உட்பட மூன்று நிறுவனங்கள் இதில் பங்கேற்கத் தகுதி பெறவில்லை என்றும், எனவே டெண்டர் விதியில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து அந்நிறுவனங்களுக்குத் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் மும்பை மெட்ரோபோலிடன் மேம்பாட்டு ஆணையம் (எம்.எம்.ஆர்.டி.ஏ) தெரிவித்து இருந்தது.

இதையடுத்து தொழில்நுட்ப டெண்டர் விடப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்றும், நிதி டெண்டர் விட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி எல் அண்ட் டி நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் எல் அண்ட் டி நிறுவனத்தின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து எல் அண்ட் டி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இம்மனு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது அடல் சேது, பாராளுமன்றம் போன்றவற்றைக் கட்டிய எல் அண்ட் டி நிறுவனம் தொழில்நுட்ப டெண்டரில் பங்கேற்கத் தகுதியில்லாமல் போனது குறித்து ஆச்சரியம் தெரிவித்து இருந்தது.
மறு டெண்டர் விடுவது குறித்துப் பரிசீலிக்கும் படி பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
மும்பை மெட்ரோபோலிடன் மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஆஜரான துஷார் மேத்தா இது குறித்து மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவைச் சொல்வதாகக் குறிப்பிட்டார்.
இதையடுத்து இவ்வழக்கு மறுநாள் விசாரணைக்கு வந்தபோது எம்.எம்.ஆர்.டி.ஏ சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு டெண்டர் ரத்து செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார்.
மொத்தம் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை சுரங்க சாலையும், 9 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பால சாலையும் அமைக்கப்படுகின்றன.
இரண்டு பணிகளுக்கும் தனித்தனியாக டெண்டர் விடப்பட்டு இருந்தது. இத்திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு இருந்த மேஹா நிறுவனம் தேர்தல் பத்திரங்களைக் கணிசமாக வாங்கி இருந்தது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, எந்த எந்த நிறுவனங்கள் தேர்தல் பாத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்துள்ளன என்ற விபரத்தைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போதுதான் மும்பையில் ₹.14000 கோடியில் சுரங்க சாலை அமைக்கப் பணி பெற்றுள்ள மேஹா எஞ்சினியரிங் நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கி இருப்பது தெரிய வந்தது.
மும்பையில் தற்போது கான்கிரீட் சாலைகள் அமைத்து வரும் நிறுவனமும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY