4000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்புகள்! கர்நாடகத்தில் இருவர் பலி!
படுக்கை இல்லாததால் கொரோனா நோயாளியை கொலைசெய்ய சொன்ன அரசு டாக்டர்; கசிந்த ஆடியோவால் சிக்கினார்!
2020-21ம் ஆண்டு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கத்தால் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தனர். அதிகமான மருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்த்துக்கொள்ள போதிய இடவசதி இல்லாமல் இருந்தது. மகாராஷ்டிரா மாநிலம், லாத்தூர் மாவட்டத்தில் கொரோனா நேரத்தில் அரசு டாக்டர் நோயாளியை கொலை செய்ய சொன்ன செய்தி 4 ஆண்டுகளுக்குப் பிறகு தெரிய வந்துள்ளது. லாத்தூர் மாவட்டத்தில் உள்ள உத்கிர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றும் சசிகாந்த் டாங்கேயிடம், மாவட்ட அரசு டாக்டர் சசிகாந்த் தேஷ்முக் கொரோனா நோயாளியை கொலை செய்துவிடுங்கள் என்று சொல்லும் ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

டாக்டர் சசிகாந்த் தேஷ்பாண்டே மாவட்ட கூடுதல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். அவர் லாத்தூர் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் சசிகாந்த் டாங்கேயிடம் போனில் பேசிய போது, எந்த நோயாளியையும் உள்ளே விடாதீர்கள். தயானி போன்ற நோயாளியை கொன்றுவிடுங்கள் என்று பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய டாக்டர் டாங்கே, ஏற்கனவே ஆக்ஜிசன் சப்ளை அளவு குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்ட ஆடியோ பதிவு இப்போது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி இருக்கிறது.
டாக்டர் தேஷ்பாண்டே கொலை செய்ய சொன்ன நோயாளி கெளஸர் பாத்திமா தயானி குணமடைந்துவிட்டார். ஆனாலும் டாக்டர்களின் உரையாடல் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த ஆடியோவின் அடிப்படையில் கெளஸர் பாத்திமாவின் கணவர் போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் திலிப் கூறுகையில்,''டாக்டர் தேஷ்பாண்டேயின் மொபைல் போன் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. டாக்டர் டாங்கேயிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
டாக்டர் டாங்கே வெளியில் இருப்பதால் வந்தவுடன் அவரது மொபைல் போனும் வாங்கி ஆய்வு செய்யப்படும்'' என்று தெரிவித்தார். பாத்திமாவின் கணவர் கொடுத்துள்ள புகாரில், ``எனது மனைவி பாத்திமா உத்கிர் அரசு மருத்துவமனையில் 2021ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இருந்தார். 10 நாட்கள் சிகிச்சையில் இருந்தார். 7வது நாள் சிகிச்சையின் போது டாக்டர் டாங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அருகில் நான் நின்று கொண்டிருந்தேன். அந்நேரம் டாக்டர் டாங்கேயிக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஸ்பீக்கரில் போட்டு டாக்டர் டாங்கே பேசினார்.

எதிர்முனையில் பேசிய டாக்டர் தேஷ்பாண்டே, மருத்துவமனையில் படுக்கைகள் இருப்பு குறித்து விசாரித்தார். அதற்கு பதிலளித்த டாக்டர் டாங்கே படுக்கைகள் காலி இல்லை என்று தெரிவித்தார். உடனே டாக்டர் தேஷ்பாண்டெ தயானி போன்ற நோயாளிகளை கொன்றுவிடுங்கள் என்று தெரிவித்தார். எனது மதம், சாதியை குறிப்பிட்டு தேஷ்பாண்டே பேசினார். எனது மனைவி அப்போது சிகிச்சையில் இருந்ததால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. சில நாட்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து எனது மனைவி வீடு திரும்பினார். ஆனால் டாக்டர்கள் பேசிக்கொண்ட உரையாடல் சமூக வலைத்தள பக்கத்தில் பரவி இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா நேரத்தில் இறந்தவர்கள் குறித்து எந்த வித கேள்வியும் எழுப்பப்படவில்லை. இதனால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி டாக்டர் தேஷ்பாண்டே இது போன்று பேசி இருக்கிறார்.