அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் யார், யார்? தொடரும் இழுபறி; பின்னணி என்ன?
தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஆறு மாநிலங்களவை எம்.பி-களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது.
பிரதிநிதித்துவ அடிப்படையில் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் நான்கு இடங்களை மூன்று தன்வசப்படுத்தி இருக்கிறது தி.மு.க.
அந்த இடங்களுக்கு வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சேலம் மாவட்டச் செயலாளர் சிவலிங்கம் ஆகியோரைக் களமிறக்கிய தி.மு.க, மீதமுள்ள ஒரு இடத்தை ம.நீ.ம தலைவர் கமல் ஹாசனுக்குக் கொடுத்திருக்கிறது.
அதேபோல, பிரதிநிதித்துவ அடிப்படையில் அ.தி.மு.க-வுக்கு இரண்டு எம்.பி-கள் சீட் கிடைத்திருக்கின்றன. இவற்றைப் பெற, அ.தி.மு.க-வுக்குள் கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசும்போது, "பிரதிநிதித்துவம் அடிப்படையில் அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கும் இரண்டு இடங்களை வெல்ல, 68 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.
அ.தி.மு.க வசம் தற்போது 62 பேர் இருக்கின்றனர். இதில் ஒரு சீட்டுக்கு வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை உறுதி செய்யப்பட்டிருக்கிறார்.
மீதமுள்ள ஒரு இடத்திற்குத்தான் கடுமையான போட்டி நடக்கிறது. அதன்படி, அந்த இடத்தைப் பிடிக்க, பா.ஜ.க. (நான்கு எம்.எல்.ஏ.க்கள்), பா.ம.க (ஐந்து எம்.எல்.ஏ.க்கள்), ஓ.பி.எஸ் தரப்பு (நான்கு எம்.எல்.ஏ.க்கள்) ஆகியோரில் இரண்டு பேரின் ஆதரவு கட்டாயம் வேண்டும்.

கூட்டணி தர்ம அடிப்படையில், பா.ஜ.க ரூட் மூலமாக அவர்களிடமிருக்கும் நான்கு எம்.எல்.ஏ-களின் ஆதரவையும், அவர்கள் மூலமாக ஓ.பி.எஸ்ஸிடம் பேசி, அந்த அணியின் ஆதரவைப் பெறலாம் என்பதுதான் எடப்பாடியின் எண்ணம்.
இதை நாங்கள் செய்து கொள்கிறோம் என்று தே.மு.தி.க எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

இதனால்தான் இழுபறி நீடிக்கிறது. ஒருவேளை அ.தி.மு.க-வுக்கே அந்த இடம் கிடைக்கும்பட்சத்தில், அதைப் பட்டியலின நபருக்குக் கொடுக்கத்தான் தலைமை முடிவெடுத்திருக்கிறது.
அதன்படி, அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளர் சதன் பிரபாகர், முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் எனப் பலரும் ரேஸில் இருக்கிறார்கள்.

அதேநேரத்தில், மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் எம்.பி-யாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது" என்கிறார்கள்.