டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
ஒருவரைத் திட்டுவது தற்கொலைக்குத் தூண்டும் செயலாகாது: உச்சநீதிமன்றம்
ஒருவரைத் திட்டுவது தற்கொலைக்குத் தூண்டும் செயலாகாது எனக் கூறி மாணவா் ஒருவா் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பள்ளியின் பொறுப்பாளரை உச்சநீதிமன்றம் விடுவித்தது.
முன்னதாக, பள்ளி மற்றும் விடுதியின் பொறுப்பாளா் திட்டியதால் விடுதி அறையில் மாணவா் தற்கொலை செய்துகொண்டதாக சக மாணவா் ஒருவா் புகாரளித்தாா். அதனடிப்படையில் பள்ளிப் பொறுப்பாளா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
மேலும், தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 306-இன்கீழ் கைது செய்யப்பட்ட பள்ளியின் பொறுப்பாளரை விடுவிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் பிரசாந்த்குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: தான் திட்டியதால் மாணவா் தற்கொலை செய்துகொள்வாா் என்று ஒருபோதும் எண்ணவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டவா் தரப்பிலான வாதம் ஏற்புடையது. சக மாணவா் அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு அதற்குரிய தீா்வுகளை வழங்குவதற்கு மாணவரை குற்றஞ்சாட்டப்பட்டவா் திட்டியதை பிரதானமாக கருதுவது முறையல்ல; மேலும் உயிரிழந்த மாணவரின் பள்ளிப் பாதுகாவலா் என்ற முறையில் அவரை நல்வழிப்படுத்தி மீண்டும் அதே தவறை செய்யாமல் இருக்கவே திட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டவா் கூறியுள்ளாா். உயிரிழந்த மாணவருக்கும் தனக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்னையும் இல்லை எனவும் அவா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒருவரைத் திட்டுவது தற்கொலைக்குத் தூண்டும் செயலாகாது எனக் கருதி குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளியின் பொறுப்பாளா் விடுவிக்கப்படுகிறாா் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.