செய்திகள் :

கர்நாடகம்: தலைமை மாற்றமா? ஆட்சி மாற்றமா?

post image

ந.முத்துமணி

2023-ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் போட்டியிட்டு, 135 இடங்களுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 'முதல்வர்' பதவி யாருக்கு என்பதில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி காணப்பட்டது.

கடந்தகால மரபுப்படி கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் தனக்கே முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று டி.கே.சிவகுமார் வாதிட்டுவந்தார். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினரின் ஆதரவைத் திரட்டுவதற்கு காரணமாக இருந்ததால், தனக்குத்தான் முதல்வர் பதவியைத் தரவேண்டும் என்று சித்தராமையா அடம்பிடித்தார்.

பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவும், வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கும் உள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையாவை ஓரங்கட்டினால், வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று காங்கிரஸ் தலைமை உணர்ந்தது. தலைமைக்கு நெருக்கமானவர் என்பதால் டி.கே.சிவகுமாரை அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.

காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வராக ஆட்சி நடத்த முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து எவ்வித அதிகாரபூர்வமாக அறிவிப்பையும் கட்சி மேலிடம் அறிவிக்கவில்லை. மாறாக, கர்நாடகத்தில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் பதவியேற்பார்கள் என்று மட்டும் காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதன்படி, 2023, மே 20 ஆம் தேதி இருவரும் பதவியேற்றுக்கொண்டனர்.

முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் ஏதாவது செய்துகொள்ளப்பட்டதா என்று கேட்டதற்கு, "மக்களோடு அதிகாரப் பகிர்வு செய்துகொண்டுள்ளோம்' என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் அப்போது பதிலளித்திருந்தார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் பதவியேற்று மே 20-ஆம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட சாதனை விழாவில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் ஒற்றுமையாக ஆட்சியை நடத்த வேண்டும்' என்று அறிவுரை கூறியிருந்தார். ஆனால், கடந்த 2 ஆண்டுகாலத்தில் "முதல்வர்' பதவி குறித்து காங்கிரஸ் அமைச்சர்களிடையே அடிக்கடி கருத்துமோதல்கள் நடந்தவண்ணம்தான் இருந்து வந்தது.

5 ஆண்டுகளுக்கு சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார் என்று அவரது ஆதரவாளர்களும், வெகுவிரைவில் டி.கே. சிவகுமார் முதல்வராக பதவியேற்பார் என்று அவரது ஆதரவாளர்களும் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒக்கலிகர் சமுதாய மாநாட்டில் பேசியிருந்த டி.கே. சிவகுமார், ஒக்கலிகர்களின் ஆதரவு இருந்தால், முதல்வர் ஆவேன் என்று பேசியிருந்தார்.

முதல்வர் கனவு: "முதல்வர்' பதவி மீது கண் வைத்துள்ள டி.கே.சிவகுமார், அதற்கேற்ப சில அரசியல் நகர்வுகளில் ஈடுபடாமல் இல்லை. முதல்வர் பதவியை அடையும் நோக்கம் தனக்கிருப்பதாக அவ்வப்போது பகிரங்கமாகக் கூறிவந்துள்ள டி.கே.சிவகுமார், 2028-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் வரை "முதல்வர்' கனவை அடமானம் வைக்கத் தயாராக இல்லை என்பதையே அவரது நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

நீர்வளத் துறையின் அதிகாரிகளை தனக்குத் தெரியாமல் பணியிடமாற்றம் செய்தது தொடர்பாக வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார், தன்னுடைய துறையில் தனது கவனத்துக்கு கொண்டுவராமல் யாரையும் பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜ்னிஷுக்கு தெரிவித்திருந்தார்.

மேலிடத் தலைவர்களின் ரகசிய சமரச ஒப்பந்தத்தின்படி, 2025, நவம்பர் 20-ஆம் தேதி முதல்வர் பதவியை தனக்கு சித்தராமையா விட்டுத்தருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில், அண்மையில் பெங்களூரு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால், அமைப்பு பொதுச் செயலரும், கர்நாடக மேலிடப் பொறுப்பாளருமான ரண்தீப்சிங் சுர்ஜேவாலாவை சந்தித்துள்ள டி.கே. சிவகுமார், முதல்வர் பதவியை தனக்கு விட்டுத்தர வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், மாற்றுநில முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சம்பந்தம் இருக்கும் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதில், சித்தராமையா குற்றவாளி ஆக்கப்பட்டால், அது காங்கிரஸ் அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்திவிடும். எனவே, முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை மாற்றும்படி டி.கே.சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

சாதனை ஆசை: 2013 முதல் 2018-ஆம் ஆண்டுவரை 5 ஆண்டுகாலம் முதல்வர் பதவியை வகித்த சித்தராமையா, இனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்திருந்தார். இந்த நிலைப்பாட்டை காற்றில் வீசிவிட்ட சித்தராமையா, 2023-இல் தேர்தலில் போட்டியிட்டு, அடம்பிடித்து மீண்டும் முதல்வராகிவிட்டார். கர்நாடகத்தின் பெரும்பான்மை சமூகங்களான லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் பாஜகவுக்கு ஆதரவளித்து வருவதால், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினரின் ஆதரவை சித்தராமையா பெற்றுத்தருவதாக காங்கிரஸ் தலைமை நம்புகிறது. அதை சாதகமாக்கி, "முதல்வர்' பதவியை விட்டுத்தராமல் பிடிவாதம் பிடிக்கிறார் சித்தராமையா.

தனது அரசியல் எதிரியாகக் கருதப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் சமூகத் தலைவர்களுடன் சமரசம் ஏற்படுத்திக்கொள்ள முனைந்துள்ளார் சித்தராமையா. அப்படித்தான், காங்கிரஸ் செயற்குழுவின் நிரந்தர அழைப்பாளரான பி.கே. ஹரிபிரசாதை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்தார் அவர். முதல்வர் பதவியில் இருந்து விலகினால், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரின் வாக்குகள் காங்கிரஸýக்கு கிடைக்காது என்று காங்கிரஸ் கட்சியை நம்பவைத்து காய்களை தனக்கு சாதகமாக நகர்த்திவருகிறார்.

பனிப்போர்: ஒருவகையில், முதல்வர் பதவிக்கான மோதல் இருவருக்கும் இடையே பனிப்போராக இருந்து வருகிறது. நீறுபூத்த நெருப்பாக கனன்றுவரும் முதல்வர் பிரச்னை, செப்டம்பர் மாதவாக்கில் பகிரங்கமாக வெடிக்கும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அதிக காலம் முதல்வராக இருந்த பெருமை எஸ்.நிஜலிங்கப்பாவுக்கு உண்டு. இவர், இரண்டுமுறையாக 7 ஆண்டுகள் 174 நாள்கள் முதல்வராக இருந்துள்ளார். அதிக காலம் தொடர்ச்சியாக முதல்வர் பதவியை வகித்தவர் டி. தேவராஜ் அர்ஸ். இவர் 1972 முதல் 1980-ஆம் ஆண்டுவரை 7 ஆண்டுகள் 134 நாள்கள் தொடர்ந்து பதவியில் இருந்துள்ளார்.

இந்தச் சாதனைகளை முறியடித்து, கர்நாடகத்தில் அதிக காலம் முதல்வராக பதவிவகித்த சாதனையைப் படைக்க சித்தராமையா விரும்புவதாகக் கூறப்படுகிறது. அதற்காக, அடுத்த 5 ஆண்டுகாலத்திற்கும் முதல்வராக நீடிக்க சித்தராமையா கணக்கு போட்டுவருகிறார்.

இப்போது முதல்வராகாவிட்டால், அடுத்து முதல்வராகும் வாய்ப்பு கிடைக்காது என்று டி.கே.சிவகுமார் உறுதியாக நம்புகிறார். அதனால், கிடைத்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதில் அவர் பிடிவாதமாக இருப்பதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2028-இல் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதை உறுதியாக கூறமுடியாத நிலையில், எதிர்காலத்தில் முதல்வராக்கப்படுவீர்கள் என்கிற மேலிடத்தின் சமாதான வாக்குறுதியை ஏற்க மறுத்துவருகிறார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்வர் பதவியை காங்கிரஸ் மேலிடம் தனக்கு வழங்காதபட்சத்தில், மகாராஷ்டிரத்தில்

சிவசேனையை உடைத்து பாஜக ஆதரவுடன் ஏக்நாத்ஷிண்டே முதல்வராக ஆட்சி அமைத்தது போல கர்நாடகத்திலும் நடக்கும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

டி.கே.சிவகுமாரை போல ஒக்கலிகர் வகுப்பைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவரும், பாஜகவின் மூத்த தலைவருமான ஆர். அசோக், "சித்தராமையா,

வெளியேறும் முதல்வர்' என்றே தொடர்ந்து குறிப்பிட்டுவருகிறார். அரசியல் எதிரியாக இருந்தாலும்,

ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்த டி.கே. சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று பாஜகவில் உள்ள அந்தச் சமுதாயத் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் விரும்புகிறார்கள்.

டி.கே.சிவகுமாரின் "முதல்வர்' கனவு நனவாகுமா என்பது செப்டம்பரில் தெரிந்துவிடும். அவர் காங்கிரஸ் சார்பில் முதல்வராவாரா அல்லது பாஜக ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வராவாரா என்பதுதான் கேள்வி!

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கா்நாடக அரசு

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பொதுமக்களை கா்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி கா்நாடகத்தில் 254 ... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு -அமைச்சா் தினேஷ்குண்டுராவ்

கடலோர கா்நாடகத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது போன்ற இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் தீவிர மழை, நிலச்சரிவு: 5 போ் சாவு

கடலோர கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பலத்த மழை பெய்து வரும் நிலையில் வீடு இடிந்துவிழுந்ததில் 5 போ் பலியாகியுள்ளனா்.கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் க... மேலும் பார்க்க

பெங்களூரில் தேசிய ஓவியக் கலை திருவிழா

பெங்களூரில் முதல்முறையாக நடைபெறும் தேசிய ஓவியக் கலை திருவிழாவில் தமிழகத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட ஓவியா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா். கா்நாடக சித்ரகலாபரிஷத் சாா்பில் பெங்களூரு ... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடா் போராட்டம்

கன்னடம் குறித்து நடிகா் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்துவரும் கன்னட அமைப்புகள், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. அண்மையில் செ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களான தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் வியாழக்கிழமை விடியவிடிய பலத்த மழை பெய்தது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் ... மேலும் பார்க்க