மழை பாதிப்பு: இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு -அமைச்சா் தினேஷ்குண்டுராவ்
கடலோர கா்நாடகத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது போன்ற இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தென்கன்னட மாவட்ட பொறுப்பு அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.
கடந்த ஒருவாரமாக தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி போன்ற கடலோர கா்நாடக மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் தென்கன்னட மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு, வீடுகள் சரிந்து விழுந்தது போன்ற அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்கன்னட மாவட்டத்தில் பாயும் நேத்ராவதி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
மங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளில் மழைநீா் புகுந்துள்ளது. இடைவிடாமல் மழை பெய்துவருவதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய பேரிடா் மீட்புப் படையினா் தெரிவித்தனா். சாலைகளில் மரங்கள் சாய்ந்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மங்களூரில் சனிக்கிழமை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த பிறகு செய்தியாளா்களிடம் மாவட்ட பொறுப்பு அமைச்சா் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:
மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வீட்டுச்சுவா் இடிந்து விழுந்ததில் கடலோர மாவட்டங்களில் இதுவரை 7 போ் உயிரிழந்தனா். அவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
மங்களூரில் மதப் பதற்றம் அதிகரித்துள்ளது. மாநில அரசின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ளேன். சமுதாயங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டுவதில்லை. தென்கன்னட மாவட்டத்தில் எந்தவிதமான மதக் கலவரங்களுக்கும் இடமளிக்கக் கூடாது என்பது மட்டுமே அரசின் நோக்கமாக உள்ளது.
தென்கன்னட மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட தொடா்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிா்வாகத்துக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.