பெங்களூருவில் கோப்பையுடன் ஊர்வலம் செல்லும் ஆர்சிபி வீரர்கள்!
விக்ரம் சுகுமாரனை இறுதிவரை வாட்டிய ஆதங்கம்!
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் உயிரிழந்தது திரைத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். ஆடுகளம் படத்தில் மதுரை வட்டார மொழி பயிற்றுநராகவும் படத்தின் உருவாக்கத்திலும் வெற்றிமாறனுக்கு துணையாக இருந்தார்.
ஆடுகளம் வெற்றிக்கு விக்ரம் சுகுமாரன் பெரிய காரணம் என பல பேட்டிகளில் வெற்றிமாறன் கூறியிருப்பார்.
தொடர்ந்து, மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் விக்ரம் சுகுமாரன் இயக்குநராக அறிமுகமானார். அப்படம், இன்றும் விமர்சகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஆனால், வெளியானபோது வணிக ரீதியாக தோல்வியைச் சந்தித்தது. அதன்பின், 6 ஆண்டுகள் கழித்து நடிகர் ஷாந்தனுவை வைத்து இராவண கோட்டம் படத்தை இயக்கினார். அப்படமும் பெரிதாகக் கவனம் பெறவில்லை.
இந்த நிலையில், தன் அடுத்த படத்தின் கதையைத் தயாரிப்பாளரிடம் கூற மதுரை சென்றவர் மாரடைப்பால் உயிரிழந்தது சக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் சுகுமாரன் அறியப்பட்ட இயக்குநராக இருந்தாலும் தன் மீது தொடர்ந்து சாதிய முத்திரை குத்தப்படுவதாக வேதனைப்பட்டு வந்தார். காரணம், மதயானைக்கூட்டம் திரைப்படம் தென்மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சாதியினரின் பழக்க, வழக்கங்கள்; சீர்செய்தல் முறையுடன் ஆண்களின் ஆதிக்கத்தைப் பதிவுசெய்திருந்தது.
ஆனால், அப்படத்தை வசனங்கள் மூலம் சுயசாதி விமர்சனங்களை முன்வைக்கும் படமாகவே உருவாகியிருந்தார். இருப்பினும், மதயானைக்கூட்டத்தில் விக்ரம் சுகுமாரன் தன் சொந்த சாதியின் பெருமையைத்தான் பதிவுசெய்திருக்கிறார் என பல விமர்சனங்கள் வந்ததால் அது அவரைக் காயப்படுத்தியிருக்கிறது.
வெளிப்படையாகவே, இதுகுறித்து தன் வேதனையைப் பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார். தனக்குக் கொடுத்த அடையாளத்தை உடைக்க வேண்டும் என்பதற்காகவே ராணவ கோட்டம் படத்தை இயக்கினார். ஆனால், அப்படத்தின் தோல்வி ஏமாற்றமாக அமைந்துவிட்டது. மீண்டும் சமூக பிரச்னையைக் கையிலெடுத்து நல்ல திரைப்படங்களை உருவாக்கும் முயற்சிகளில் இருந்த நேரத்தில் அவரின் திடீர் மறைவு திரை விமர்சகர்களிடமும் பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க: இந்தப் பாடல்களைக் கேட்டிருந்தால் நீங்கள் இளையராஜாவின் தீவிர ரசிகர்!