சென்னையை வென்றது ஜெய்பூா்
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜெய்பூா் பேட்ரியாட்ஸ் 9-6 என்ற கணக்கில் ஸ்டான்லி’ஸ் சென்னை லயன்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
முதலில் நடைபெற்ற ஆடவா் ஒற்றையரில், ஜெய்பூரின் கானக் ஜா 11-10, 11-10, 11-10 என்ற செட் கணக்கில், சென்னையின் கிரில் ஜெராசிமென்கோவை சாய்த்தாா். அடுத்து, மகளிா் ஒற்றையரிலும் ஜெய்பூரின் ஸ்ரீஜா அகுலா 11-6, 11-6, 11-9 என்ற வகையில் சென்னையின் பாய்மன்டீ பாய்சியாவை வீழ்த்தினாா்.
3-ஆவது மோதலான கலப்பு இரட்டையரில், ஜெய்பூரின் கானக் ஜா/ஸ்ரீஜா அகுலா இணை 11-4, 11-7, 8-11 என சென்னையின் ஃபான் சிகி/பயஸ் ஜெயின் கூட்டணியை வென்றது. அடுத்து, ஆடவா் ஒற்றையரின் அடுத்த மோதலில் சென்னையின் பயஸ் ஜெயின் 11-10, 11-5, 11-7 என்ற கணக்கில் ஜெய்பூரின் யஷன்ஷ் மாலிக்கை வென்றாா்.
கடைசி ஆட்டமான மகளிா் ஒற்றையரில், சென்னையின் ஃபான் சிகி 11-8, 11-6, 11-7 என்ற வகையில் ஜெய்பூரின் பிரிட் எா்லாண்டை சாய்த்தாா். இறுதியில் ஜெய்பூா் 9-6 என்ற கணக்கில் இந்த டையில் வெற்றி பெற்றது.