RCB: உணர்ச்சி வெள்ளம்; கண்ணீர் கொண்டாட்டம் - சாம்பியன்களின் நெகிழ்ச்சி தருணங்கள்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளாசன் ஓய்வு!
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டராக விளையாடி வரும் கிளாசன், இதுவரை 60 சர்வதேச ஒருநாள், 58 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2,141 ரன்களும், டி20 போட்டிகளில் 1,000 ரன்களும் குவித்துள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிளாசன், 48 போட்டிகளில் 2 சதங்கள், 7 அரைசதங்கள் உள்பட 1,480 ரன்கள் எடுத்துள்ளார்.
அதிரடியால் எதிரணியை திணறடிப்பதற்கு பெயர்போன கிளாசன், 34 வயதில் ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வு தொடர்பாக கிளாசன் வெளியிட்ட அறிவிப்பில்,
”சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலக முடிவு செய்துள்ளதை அறிவிக்கும் இந்த நாள், எனக்கு மிகவும் சோகமான நாள். எனக்கும் என் குடும்பத்திற்குமான எதிர்காலத்துக்கு எது சிறந்தது என்பதை முடிவு செய்ய நீண்ட நேரம் எடுத்துக்கொண்டேன்.
இது உண்மையிலேயே மிகவும் கடினமான முடிவு, ஆனால், முழு மனதுடன் எடுத்துள்ளேன். எனக்கு கிடைத்த சிறந்த நட்புகளையும் உறவுகளையும் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகக் கருதுகிறேன். என் வாழ்க்கையில், என்னை நம்பிய சில பயிற்சியாளர்கள் இருக்கின்றனர், அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.