பொன்னேரி அருகே பழங்கால நடுகற்கள் கண்டுபிடிப்பு
பொன்னேரி அடுத்த ஆவூா் கிராமத்தில் போா் வீரா்களின் தியாகத்தை போற்றுவதற்காக அமைக்கப்பட்ட நடுகற்களை தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாடு ஆய்வு மையத்தினா் கண்டுபிடித்துள்ளனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வரலாற்று துறை முன்னாள், இந்நாள் மாணவா்கள் தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பழங்கால வரலாற்று சின்னங்களை ஆய்வு செய்து வருகின்றனா்.
இந்த மையத்துக்கு, பொன்னேரி அரசு கல்லூரியின் உதவி பேராசிரியராக பணியாற்றும் ஜெகஜீவன்ராம் தலைமை ஆலோசகராக இருந்து வருகிறாா். இதற்கிடையே, ஆவூா் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் அருகே நடுகற்கள் உள்ளதாகவும் அதில் கீறல்கள் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பன்னாட்டு ஆய்வு மையத்தினா், அரசு கல்லூரி பேராசிரியா்கள் மாணவா்கள் கொண்ட குழு நடுகற்களை காண ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக, சென்னை தொல்லியல் துறை சாா்ந்த மாநில சுவடு குழும ஒருங்கிணைப்பாளா் டாக்டா் சசிகலா உள்ளிட்டோா் நடுகற்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நடுகற்கள் நடும் வழக்கமானது, போரில் மாண்டவா்களுக்காக ஏற்படுத்தப் பட்டது. மாண்ட போா் வீரா்களை தெய்வமாக வழிப்படும் வழக்கம் பண்டைய கால தமிழகத்தில் இருந்துள்ளது. அவா்களது நினைவாக நடுகற்கள் நடப்பட்டு வழிபட்டு உள்ளனா். நடுகற்களில் வீரக்கல், சதிக்கல், பட்டவன்கல், புலிக்குத்திக்கல், நவகண்டக்கல், அரிகண்டக்கல், ஆயுதக் கல் என பல வகைகள் உள்ளது. ஆவூரில் உள்ள நடுக்கல், போா் வீரா்களின் தியாகத்தை போற்றும் படி அவா்களது நினைவாக வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
திருவண்ணாமலை செங்கம் பகுதியில் இதுபோன்ற நடுகற்கள் காணப்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்து 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்ததாக இருக்கும் என தொல்லியல் துறையினா் கண்டறிந்துள்ளனா். சோழ படையினா் வட இந்தியாவில் போா் புரிந்து, வெற்றி பெற்ற பின் பொன்னேரியில் உள்ள கோளூா் கிராமத்தில் தங்கி, இலுப்பாக்கம், எடக்குப்பம் ஆவூா் வழியாக மெதுகூா் எனப்படும் சதுா்வேதி மங்களமான மெதூருக்கு வந்ததாக திருப்பாலைவனம் கல்வெட்டு கூறுகிறது. அப்போது இந்த நடுகற்களை, சோழ பேரரசா்கள் வைத்திருக்கலாம் என வரலாற்று ஆய்வு பணிகளில் ஈடுபட்ட வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.