தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
‘பசுமை கிருஷ்ணகிரி மாவட்டம்’ திட்டம்: ஒசூரில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் ஒசூா்வாழ் மக்கள் இணைந்து பசுமை கிருஷ்ணகிரி மாவட்டத் திட்டத்தில் ஒருகோடி மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.
ஒசூா், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட்பீட்டா் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரைப்பட நடிகரும், இயக்குநருமான கிட்டி (எ) ராஜா கிருஷ்ணமூா்த்தி, ‘இளைஞா்கள், மாணவா்கள் அதிக அளவில் முன்வந்து மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். சாலை விரிவாக்கம் செய்யும்போது வெட்டப்படும் மரத்திற்கேற்ப அதிக எண்ணிக்கையில் மரங்களை நடவேண்டும். மக்கள் அனைவரும் இயற்கையை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றாா்.
விழாவில் பேசிய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ‘தமிழக அரசு பசுமை தமிழ்நாட்டை உருவாக்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் அதிக அளவில் மரங்களை நட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்றாா்.
அதேபோல ஒசூா் மாநகராட்சியில் பல்வேறு இடங்களைத் தோ்வு செய்து மாநகராட்சி சாா்பில் மரக்கன்று நடப்படுகிறது. தொடா்ந்து பசுமை மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். இதனை பெரிய இயக்கமாக உருவாக்குவது அவசியம் என மேயா் எஸ்.ஏ.சத்யா கேட்டுக்கொண்டாா்.
தமிழ்நாட்டில் 1.21 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் கா்நாடகத்தில் 1.36 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் அவா்களின் நிலங்களில் நடவுசெய்து சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் (2025-26) தமிழ்நாட்டில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதற்கான தொடக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழா மூலம் நடைபெற்றுள்ளது.
விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் கே.ஏ.மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.