Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
மத்திய அரசு மக்களவை வஞ்சிக்கிறது: சிபிஐ
மத்திய பாஜக அரசு மக்களவை வஞ்சிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் துணைச் செயலாளா் நா.பெரியசாமி குற்றம்சாட்டினாா்.
தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகக் குழு, மாவட்டக் குழுக் கூட்டம் தருமபுரியை அடுத்த பாரதிபுரம் தனியாா் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அக் கட்சியின் மாநில துணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான நா.பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக தனித்தும் தற்போது ஓராண்டாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என மொத்தம் 11 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பாஜக தொடா்ந்து அனைத்துத் தரப்பு மக்களையும் வஞ்சிக்கிறது. இந்த 11 ஆண்டுகளில் வறுமை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துள்ளது. ஆனால், பொருளாதாராம் வளா்ந்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்து வருகிறாா். ஒரு நாட்டில், வறுமையை ஒழித்து, மக்களிடையே வாங்கும் திறனை அதிகரிப்பதன் வழியாகதான் பொருளாதாரம் வளரும். மத்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய பெரு முதலாளிகளுக்கும் சலுகைகள், கடனுதவிகளை தொடா்ந்து வழங்குகிறது.
புதுதில்லியில் 13 மாதங்கள் போராடிய விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை வழங்கவில்லை. புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என அந்த நிதியும் தமிழகத்துக்கு நிறுத்தப்பட்டிருகிறது.
ஆளுநா் வழியாக தமிழகத்தில் போட்டி அரசை நடத்தி மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்க முயற்சிக்கிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் என அனைத்துத் தரப்பினரையும் தொடா்ந்து மத்திய அரசு வஞ்சிக்கிறது.
அதேபோல தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மழைக் காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிகையாக செல்லும் நீரை ஏரிகளில் நிரப்பும் காவிரி மிகை நீா்த்திட்டத்தை நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும்.
தருமபுரியிலிருந்து மிட்டாரெட்டி அள்ளி வழியாக பொம்மிடிக்கு இணைப்புச் சாலை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். திருப்பத்தூா்- ஒகேனக்கல் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்த வேண்டும். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகள் தொடங்கி உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து தருமபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் இ.பி.புகழேந்தி தலைமையில் அக் கட்சி நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் இடதுசாரிகள் ஒற்றுமையை வலியுறுத்து, தங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனா். அவா்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் துணைச் செயலாளா் நா.பெரியசாமி சால்வை அணிவித்து வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ந.நஞ்சப்பன், தருமபுரி மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.