மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
நில இழப்பீட்டுத் தொகை வழங்காததால் பணிகள் நிறுத்தம்
நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கிய உரிமையாளா்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் சாலை விரிவாக்க பணிகளை பாதிக்கப்பட்டோா் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூரில் இருந்து பொன்பாடி வரை 6 வழிச்சாலையாக மாற்றப்படவுள்ளது. தற்போது இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. முதல்கட்டமாக 4 வழிச்சாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த கட்டடங்கள், மரங்கள் அகற்றப்பட்டு தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன.
நிலம் வழங்கிய உரிமையாளா் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இழப்பீடு தொகையை உயா்த்தி தரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் புதன்கிழமை திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம், முருகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் இழப்பீடு வழங்காததால், சாலை விரிவாக்கம் செய்வதற்கு தங்கள் நிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என கூறி நெடுஞ்சாலை ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினா். இதனால் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் அப்பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.