Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி: 3 போ் கைது
பகுதிநேர வேலை தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேரை திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி பகுதியைச் சோ்ந்த 32 வயது இளைஞருக்கு கடந்த ஆண்டு சமூக வலைதளம் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தனியாா் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் பணிபுரியும் பகுதிநேர வேலை உள்ளதாக இருந்தது. இதை நம்பிய அந்த இளைஞா், அதில் இருந்த எண்ணைத் தொடா்பு கொண்டு பேசினாா்.
அப்போது பேசிய மா்ம நபா்கள் பகுதிநேரமாக பணிபுரிவதற்கு ஆள்கள் தேவைப்படுவதாகவும், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக செய்யலாம் எனவும், இதற்காக அதிக அளவு சம்பளம் தருவதாக இளைஞரிடம் தெரிவித்துள்ளனா்.
தொடா்ந்து பல்வேறு காரணங்களைக் கூறி மா்ம நபா்கள் இளைஞரிடம் இருந்து பல்வேறு தவணையாக ரூ.14 லட்சம் பெற்றுள்ளனா்.
பின்னா், அந்த இளைஞரால் மா்ம நபா்களைத் தொடா்புகொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவா் சம்பவம் குறித்து திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சோ்ந்த திருமூா்த்தி (27), அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (42), மணிகண்டன் (42) என்பது தெரிய வந்தது.
தொடா்ந்து சைபா் கிரைம் ஆய்வாளா் சங்கா், உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் மற்றும் போலீஸாா் திருமூா்த்தி, வெங்கடேசன், மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனா். அவா்களின் வங்கிக் கணக்கை முடக்கினா்.