RCB: உணர்ச்சி வெள்ளம்; கண்ணீர் கொண்டாட்டம் - சாம்பியன்களின் நெகிழ்ச்சி தருணங்கள்
DilRoo: 20 அடி அலைகள்; குளிர்... பாய்மரக் கப்பலில் உலகைச் சுற்றி வந்த இந்திய கடற்படை வீராங்கனைகள்
இந்திய கடற்படை வீராங்கனைகள், கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த கே. தில்னாவும் புதுச்சேரியைச் சேர்ந்த ரூபா அழகிரிசாமியும் இணைந்து, உலகம் முழுவதையும் 'INSV தாரிணி' என்ற கப்பலில் பயணித்து, 'நவிகா சாகர் பரிக்ரமா - II' கடற்பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். இந்த இரு வீராங்கனைகளும், கடலில், எட்டு மாதங்களில் சுமார் 25,400 (nautical miles) மைல் தூரத்தைக் கடந்து, முழு உலகையும் பயணித்துள்ளனர். பாய்மரக்கப்பலில், இரட்டைக் கைச்சுற்று முறையில் கப்பலை இயக்கி, இரண்டு பெண்கள் மட்டுமே கடற்பயணம் செய்து சாதனை நிகழ்த்தியது உலகளவில் இதுவே முதல் முறையாகும்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணமானது, அக்டோபர் 2, 2024 அன்று, கடற்படை தளபதியான 'தினேஷ் கே திரிபாதி' அவர்களால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. INSV தாரிணி, கோவாவில் உள்ள ஐஎன்எஸ் மண்டோவியிலிருந்து பயணத்தைத் தொடங்கி உலகை வலம் வந்தது. எட்டு மாதங்களுக்கும் மேலாக INSV தாரிணியில் பயணம் மேற்கொண்ட #DilRoo என பிரபலமாய் அறியப்படும் கடற்படை வீராங்கனைகளான கே. தில்னா மற்றும் ரூபா, நான்கு கண்டங்கள், மூன்று பெருங்கடல்கள் மற்றும் கடல் துருவத்தைக் கடந்து, சுமார் 25,400 கடல் மைல்கள் (தோராயமாக 50,000 கி.மீ) பயணித்திருக்கிறார்கள். கடுமையான வானிலை மற்றும் ஆபத்தான கடல் அலைகளை சமாளித்து, பாய்மரங்களை மட்டுமே நம்பி பயணத்தை மேற்கொண்டனர் இந்தக் கடற்படை வீராங்கனைகள்.
கடற்பயணத்தின்போது, இந்தியக் கொடியை ஏந்திய இரு வீராங்கனைகளும், ஃப்ரீமண்டில் (ஆஸ்திரேலியா), லிட்டெல்டன் (நியூசிலாந்து), போர்ட் ஸ்டான்லி (பால்க்லேண்ட் தீவுகள்) மற்றும் கேப் டவுன் (தென் ஆப்பிரிக்கா) ஆகிய துறைமுகங்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இந்த சாதனைப் பயணத்தின்போது, இருவீராங்கனைகளும் பல்வேறு சமூக நல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர், பள்ளி மாணவர்கள், கடற்படை அதிகாரிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர்களுடன் தொடர்புகொண்டு பேசினர். பயணத்தின்போது, மேற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு, இவர்கள் கௌரவிக்கப்பட்டது இவர்களது சாதனைகளுக்கான சிறந்த அங்கீகாரம் என்றே குறிப்பிட வேண்டும்.
கடலின் இடைவிடாத சவால்களுக்கு மத்தியில் பயணித்த வீராங்கனைகள், மணிக்கு 93 கிமீ வேகத்தில் காற்று வீசுதல், புயல் மற்றும் கடுமையான குளிர் ஆகியவற்றை தங்கள் திடமனதால், விடாமுயற்சியால் எதிர்கொண்டு தங்களுடைய சுற்றுப்பயணத்தை வரலாற்றில் எழுதியுள்ளனர்.
உலக சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து, மே 29, 2025 அன்று, கோவாவில் உள்ள மர்மகோவா துறைமுகத்தை வந்தடைந்த வீராங்கனைகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்று, வாழ்த்திப் பேசினார். "இந்த வீராங்கனைகள் மூவர்ணக் கொடியை உலகம் முழுவதும் பறக்கவிட்டு தேசத்தைப் பெருமைப்படுத்தியுள்ளனர். இவர்களது சாதனை நம் தேசத்தின் சாதனை. உங்கள் அனுபவங்களையும் கற்றல்களையும் பதிவு செய்யுங்கள்; உங்கள் அனுபவங்களால் எதிர்காலச் சந்ததியினர், குறிப்பாக இளம் பெண்கள் உத்வேகம் பெற முடியும். சியாச்சினின் உயரத்திலிருந்து கடலின் ஆழம் வரை, இந்தியப் பெண்கள் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவல்ல பொறுப்புகளை நிறைவேற்றுகின்றனர்" என்று பெருமிதத்துடன் கூறினார்.
என் தந்தை இப்போது எங்களோடு இல்லை. ஆனால், பயணம் முழுவதும் அவர் இருப்பை நான் உணர்ந்தேன்.
பயணத்தின் வெற்றி குறித்து பேசிய தில்னா, "கடந்த ஆண்டு, நாங்கள் கடற்பயணத்தை ஆரம்பித்தபோது, எங்களுடைய நம்பிக்கைகளை மட்டுமல்லாமல் பலரின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து சென்றோம். இன்று, உங்கள் முன் வெற்றி பெற்று நிற்கும்போது, எங்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்த எங்கள் குடும்பம், கடற்படையினர் மற்றும் தெரியாத பலரை நாங்கள் பெருமைப்படுத்தியுள்ளோம். என் தந்தை இப்போது எங்களோடு இல்லை. ஆனால், பயணம் முழுவதும் அவர் இருப்பை நான் உணர்ந்தேன். நான் அவருக்கு அளித்த வாக்குறுதியை இன்று நிறைவேற்றிவிட்டேன்" என உற்சாகமாகக் கூறினார்.
20 அடி அலைகள் ஒரு சுவரைப் போல எங்களைத் தாக்கின.
பயணத்தின் வெற்றி குறித்து பகிர்ந்த ரூபா, "கடந்த எட்டு மாதங்களில் என் ஏழு ஜென்ம வாழ்வையும் நான் வாழ்ந்துவிட்டதாக நினைக்கிறேன். கடல் சார்ந்த உலகம், இந்தக் கிரகத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், அது வேறொரு உலகம். சில நேரங்களில், 20 அடி அலைகள் ஒரு சுவரைப் போல எங்களைத் தாக்கின. சில நேரங்களில், கடல் ஓர் அமைதியான கண்ணாடிபோல இருந்தது. எனது முதுகெலும்பாக இருந்து ஆதரித்ததற்காக என் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது இந்த வெற்றியை அவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன். படகின் வடிவமைப்பாளருக்கும் பாராட்டுக்கள்" எனக் கூறினார்.
ஓர் இன்ட்ரஸ்ட்டிங்காக தகவல். லெப்டினன்ட் கமாண்டர் ரூபாவின் தாயாருடைய பிறந்தநாளுக்கு அடுத்த நாள் தொடங்கிய 'நவிகா சாகர் பரிக்ரமா II' பயணமானது, லெப்டினன்ட் கமாண்டர் தில்னாவின் தாயாருடைய பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.